தமிழ்நாடு

மாணவிகளை நிர்வாணமாக நிற்கவைத்த அரசு பள்ளி ஆசிரியர்.! மதுரையை உலுக்கும் பாலியல் புகார்.! 

Malaimurasu Seithigal TV

சென்னையில் நடந்ததுபோன்றே, மதுரையிலும் ஒரு பள்ளியில் ஆசிரியர் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் தற்போது வெளியாகியுள்ளது.

சென்னை பிஎஸ்பிபி பள்ளி விவகாரம் வெளிச்சத்துக்கு வந்தபிறகு, பல பாலியல் புகார்கள் வெளிவருகின்றன. தமிழகத்தில் 30 பள்ளி, கல்லூரிகளைச் சேர்ந்த 30 மாணவர்கள் பாலியல் புகார்களை தெரிவித்துள்ளதாக தகவல் சொல்லப்படுகிறது.

சென்னை பி.எஸ்.பி.பி பள்ளியில நடந்த பாலியல் சர்ச்சை தமிழகம் முழுக்க அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரத்தில் தமிழக அரசும் உடனடியாக நடவடிக்கை எடுத்தது. இதன் காரணமாக இதுபோன்று பாதிக்கப்பட்ட பல மாணவர்கள் தொடர்ச்சியாக பாலியல் புகார்களை கூறிவருகிறார்கள். அந்த வரிசையில் தற்போது அரசு பள்ளியும் இணைந்துள்ளது.

மதுரையில் அமைந்துள்ள வெள்ளி வீதியார் மாநகராட்சி பெண்கள் பள்ளியில் ஆங்கில ஆசிரியராக பணியாற்றுபவர் விஜய் பிரபாகரன், இவரது மனைவி மதுரையில் பிரபல மகரிஷி மெட்ரிக் பள்ளியை நடத்தி வருகிறார். விஜய் பிரபாகரன் மாநகராட்சி பள்ளியில் படிக்கும் பிளஸ் 2 மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தது மட்டுமில்லாமல், தன் அறையில் மாணவிகளை நிர்வாணப்படுத்தியுள்ளார் என்றும் கூறப்படுகிறது. 

மேலும் ஆன்லைன் வகுப்பின் போதும் மாணவிகளுக்கு பாலியல் தொல்லைகள் கொடுத்துள்ளார். இதனைக் கண்ட மாணவியின் தந்தை ஒருவர் பள்ளி முதல்வரிடம் புகார் கொடுத்துள்ளார். ஆனால் இது மாநகராட்சி பள்ளி என்பதால், மாநகராட்சி கல்வி அதிகாரிகள்தான் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பள்ளி முதல்வர் கூறியதால் மாநகராட்சி கல்வி அதிகாரிகளிடம் முறையிட்டுள்ளார். 

இந்த சம்பவம் பற்றி அறிந்த ஆசிரியர் விஜய் பிரபாகரன் மாநகராட்சி கல்வி அதிகாரிகளுக்கு பல லட்சங்கள் லஞ்சமாக கொடுத்ததும் அதன் பின் சம்மந்தப்பட்ட மாணவியின் குடும்பத்துக்கும் சில லட்சங்கள் கொடுத்து இந்த பிரச்சனையை முடிவுக்கு கொண்டு வந்துள்ளார். ஆனால் இந்த சம்பவத்தை அதே பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர் ஒருவர் ஆதாரத்துடன் சமூக ஆர்வலர் ஜெயசந்திரன் என்பவரிடம் கொடுத்துள்ளார்.

இதுகுறித்து அறிந்ததும் போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் புகார் அளித்தார்  சமூக ஆர்வலர் ஜெயசந்திரன். உடனே இதுதொடர்பாக வழக்கு பதிவு செய்ய உத்தரவிட்டது நீதிமன்றம். அதைத் தொடர்ந்து கரிமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து பின் அந்த வழக்கு தெற்கு அனைத்து மகளிர் காவல் நிலையத்துக்கு மாற்றப்பட்டது. இந்த வழக்கில் மாணவியின் புகார் மீது நடவடிக்கை எடுக்காத மாநகராட்சி மாவட்ட கல்வி அலுவலர்களும் சேர்க்கப்பட்டனர். இந்த வழக்கிலும் உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டு ஆசிரியர் விஜய் பிரபாகரன் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.