தமிழ்நாடு

"சமூக நீதி நாள்" உறுதிமொழி ஏற்பு விழா - முதலமைச்சர் பங்கேற்பு

தந்தை பெரியாரின் 143-வது பிறந்த நாளை முன்னிட்டு

Malaimurasu Seithigal TV

தந்தை பெரியாரின் 143-வது பிறந்த நாளை முன்னிட்டு "சமூக நீதி நாள்" உறுதிமொழி ஏற்பு விழா சென்னை தலைமை செயலகத்தில் உள்ள ராணுவ மைதானத்தில் நடைப்பெற்றது. இதில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள், தலைமை செயலாளர் இறையன்பு, அரசு செயலாளர்கள், தலைமை செயலக பணியாளர்கள் அனைவரும் பங்கேற்றனர்.

தமிழக சட்டமன்ற கூட்டத்தொடரில்,  பெரியார் பிறந்தாள்  சமூகநீதி நாளாக கொண்டாடப்படும் என 110 விதியின் கீழ் தமிழ்நாடு முதலமைச்சர் அறிவிப்பு வெளியிட்டார். அதனடிப்படையில், தலைமை செயலகம் தொடங்கி அனைத்து அரசு அலுவலகங்களிலும் உறுதி மொழி ஏற்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டது. அந்த வகையில், சென்னை தலைமை செயலகத்தில் நடைப்பெறும் "சமூக நீதி நாள் " உறுதிமொழி ஏற்பில் முதலமைச்சர் உறுதிமொழி வாசிக்க அனைவரும் அதனை ஏற்றுக்கொண்டனர்.

அந்த வகையில், பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற அன்பு நெறியும் - யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற பண்பு நெறியும் எனது வாழ்வியல் வழிமுறையாக கடைப்பிடிப்பேன் என்றும்,சுயமரியாதை ஆளுமைத் திறனும் - பகுத்தறிவுக் கூர்மை பார்வையும் கொண்டதாக என்னுடைய செயல்பாடுகள் அமையும் எனவும் உறுதிமொழியில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், சமத்துவம், சகோதரத்துவம், சமதர்மம் ஆகிய கொள்கைகளுக்காக என்னை நான் ஒப்படைத்து கொள்வேன் என்றும், மானுடப் பற்றும் மனிதாபிமானமும் ஒன்றே எனது இரத்த ஓட்டமாக அமையும் எனவும்,சமூக நீதியையே அடித்தளமாகக் கொண்ட சமுதாயம் அமைக்கும் எனது பயணம் தொடர இந்த நாளில் உறுதி ஏற்கிறேன் என உறுதிமொழி ஏற்றுக்கொள்ளப்பட்டது.