பிரபல பட்டிமன்றப் பேச்சாளர் சாலமன் பாப்பையா தனது 90-வது வயதில் உயிரிழந்துள்ளார்.
இவர் மதுரை, திருமங்கலம் அருகே உள்ள சாத்தங்குடியில், பிப்ரவரி 22, 1936 அன்று பிறந்தவர்.
எழுத்தாளர், பட்டிமன்றப் பேச்சாளர், நடுவர் மற்றும் பதிப்பாசிரியர் எனப் பல முகங்கள் இவருக்கு உண்டு. தமிழ்ப் பேராசிரியராகவும் பணியாற்றியுள்ளார். பல்வேறு நூல்களுக்கு உரை எழுதியுள்ளார். தனது இலக்கியப் பணிகளுக்காக பத்மஸ்ரீ விருது பெற்றுள்ளார்.
சின்னத்திரை நிகழ்ச்சிகளிலும் திரைப்படங்களிலும் கூட நடித்திருக்கிறார்.
இவரது மனைவி ஜெயாபாய் கடந்த ஆண்டு உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது. இவர்களுக்கு தியாகமூர்த்தி என்ற மகனும், விமலா என்ற மகளும் உள்ளனர்.
இவர் தமிழ் மொழியின் வளர்ச்சிக்காகப் பெரும் பங்காற்றியுள்ளார். திருக்குறளுக்கு உரை விளக்கம் எழுதியுள்ளார். புறநானூறு பாடல்களை புதிய வரிசைப்படி உரையெழுதி வெளியிட்டுள்ளார். அகநானூற்றுக்கு மூன்று தொகுதிகளாக உரை எழுதியுள்ளார்.
தமிழக அரசின் கலைமாமணி விருது, திருக்குறள் செம்மல் விருது உள்ளிட்ட பல்வேறு விருதுகளைப் பெற்றுள்ளார்.
இவரது பட்டிமன்றங்கள் தமிழ் மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுவந்தன. குடும்பம், உறவுகள், சமூகம் சார்ந்த பல்வேறு புதிய தலைப்புகளில் பட்டிமன்றங்களை நடத்தி, வெகுமக்களைக் கவர்ந்தார். இவரது மரணம் தமிழ் உலகுக்கு பேரிழப்பாகக் கருதப்படுகிறது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்