தமிழ்நாடு

மதுரை மக்கள் செங்கலை எடுப்பதற்கு முன்...வேலையை தொடங்க வேண்டும்...மத்திய அரசுக்கு வலியுறுத்திய உதயநிதி ஸ்டாலின்!

Tamil Selvi Selvakumar

விளையாட்டுத் துறையை மேம்படுத்த மானியக் கோரிக்கையின் போது நல்ல அறிவிப்புகள் வெளியிடப்படும் என்று விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார். 

ஆண்டுதோறும் ஐஏஎஸ், ஐஎஃப்எஸ் மற்றும் ஐ ஆர் எஸ் அதிகாரிகளுக்கான கிரிக்கெட், இறகுப்பந்து, கால்பந்து போட்டிகள் தமிழக அரசு சார்பில் நடத்தப்படுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு அவர்களுக்கான விளையாட்டு போட்டிகள் போரூரில் நடைபெற்றது. இதில் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளுக்கான கிரிக்கெட் போட்டியை தொடங்கி வைத்தார். 

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த உதயநிதி ஸ்டாலின், ஆண்டுதோறும் நடைபெற்று வரும் கிரிக்கெட், கால்பந்து, இறகுப்பந்து போட்டிகளில் ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஏஎஸ் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் கலந்து கொள்ளும் முதல் போட்டியை துவக்கி வைக்கும் வாய்ப்பு இந்த முறை தனக்கு கிடைத்துள்ளதாக பெருமிதம் தெரிவித்தார். தமிழ்நாட்டில் உள்ள விளையாட்டுத் துறை கட்டமைப்புகளை வீரர்கள் சிறந்த முறையில் பயன்படுத்திக் கொள்ளும் வகையில் அறிவிப்புகள் வெளியிடப்படும் என்று கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், கடந்த சட்டமன்ற தேர்தலின்போது கையில் செங்கல்லை வைத்துக்கொண்டு சுற்றி வந்தேன், தற்போது அந்த செங்கல்லை பற்றி அனைவரும் பேச ஆரம்பித்துள்ளார்கள். எனவே, மதுரை மாவட்ட மக்கள் அனைவரும் கையில் செங்கல்லை எடுப்பதற்கு முன்பு, வேலையை ஆரம்பிக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு உதயநிதி ஸ்டாலின் கோரிக்கை வைத்துள்ளார்.