தமிழ்நாடு

பக்தர்களுக்கு அருள்பாலித்த ஸ்ரீரங்கம் அரங்கநாதர்!!!

ஸ்ரீரங்கம் அருள் மிகு அரங்கநாதர் திருக்கோவில் பவித்திர உற்சவம் ஏழாம் திருநாளை முன்னிட்டு நம்பெருமாள் நெல் அளவை கண்டருளினார். இதனை பலரும் நேரில் வந்து தரிசித்தனர்.

Malaimurasu Seithigal TV

108 வைணவத் திருத்தலங்களில் முதன்மையானதும் பூலோக வைகுண்டம் என, பக்தர்களால் போற்றப்படுவதுமான, ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதர் சுவாமி திருக்கோவிலில் ஆண்டுதோறும் ஆவணி-புரட்டாசி மாதத்தில் பவித்ர உற்சவம் எனப்படும் நூலிழை திருநாள் 9 நாட்கள் மிக சிறப்பாக நடைபெறும்.

அப்போது கோவிலின் அனைத்து சன்னதிகளிலும் மூலவர், உற்சவர் உள்பட சிறிய, பெரிய மூர்த்திகள் அனைவருக்கும் நூலிழைகள் கொண்டு அலங்காரம் செய்யப்பட்டிருக்கும் எனவே இதற்கு நூலிழை திருவிழா என்ற சிறப்புப் பெயரும் உண்டு. இவ்விழாவே ஸ்ரீரங்கத்தில் திருப்பவித்ரோத்சவம் என்ற பெயரில்  நடைபெற்று வருகிறது.

பவித்ரோத்சவத்தை முன்னிட்டு உற்சவர் நம்பெருமாள் தினமும் மாலையில் மூலஸ்தானத்திலிருந்து புறப்பட்டு தங்கக் கொடிமரத்திற்கு அருகில் உள்ள பவித்ரோத்சவ மண்டபத்தில் எழுந்தருளுவார்.

திங்கள் கிழமை மாலை உற்சவத்தின் 7-ம் நாளான முக்கிய நிகழ்ச்சியாக உபயநாச்சியார்களுடன் நம்பெருமாள் மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்டு கோவில் கொட்டாரத்தில் நெல் அளவை கண்டருளுகிறார். பின்னர் அங்கிருந்து புறப்பட்டு தாயார் சன்னதி சென்றடைந்தார். அங்கு நம்பெருமாளுக்கு மங்கள ஆரத்தி காண்பிக்கப்பட்டது.

இதில் பெரும் திரளான கலந்து கொண்டு பக்தர்கள் ரங்கா ரங்கா என பக்தி பரவசத்துடன் வணங்கி வழிபட்டனர். உற்சவத்தின் நிறைவாக 9-ம் திருநாள் 14ஆம் தேதி அன்று காலை நம்பெருமாள் சந்திர புஷ்கரணியில் தீர்த்தவாரி கண்டருளுகிறார்.