தமிழ்நாடு

மது குடித்த நபருக்கு திடீரென மூக்கில் வழிந்த ரத்தம்.... மதுபிரியர்கள் பீதி....

கள்ளகுறிச்சி அருகே அரசு மதுபானக் கடையில் மது வாங்கி குடித்த நபர்க்கு மூக்கில் ரத்தம் வழிந்ததால், அங்கிருந்த மதுபிரியர்கள் பீதியடைந்தனர்.

Malaimurasu Seithigal TV

கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகம் ஒன்றியத்திற்குட்பட்ட  விருகாவூர்  கிராமத்தில் அரசு மதுபான கடை உள்ளது. இந்த மதுபான கடையில் முடியனுர் கிராமத்தைச் சேர்ந்த சாமிதுரை மகன் செந்தில் என்பவர் இன்று மதியம் 145 ரூபாய் மதிப்புள்ள காப்பர் என்ற மதுபானத்தை வாங்கி குடித்து உள்ளதாக கூறப்படுகிறது. மதுவை குடித்த மறுநிமிடமே அவரது மூக்கில் இருந்து ரத்தம் வழிய தொடங்கியுள்ளது. இதை பார்த்த அங்கிருந்தவர்கள் பதற்றமடைந்தனர். 

அதுமட்டுமல்லாது மற்றொரு மது பாட்டிலின் உள்ளே குப்பை மற்றும் பூச்சி இருந்ததாக சொல்லப்படுகிறது. இதனால் அச்சமடைந்த செந்தில் மதுபானகடை ஊழியரிடம் கேட்டுள்ளார். அப்போது இருவருக்கும் வாக்குவாதம் ஏற்படவே அப்பகுதியில் பரபரப்பு நிலவியது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், அந்தபகுதியில் அசம்பாவிதம் ஏதும் நடக்காமல் இருக்க மதுபான கடையை மூடி அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். மேலும் மூக்கில் ரத்தம் வழிந்தநிலையில் இருந்த செந்திலை, கள்ளகுறிச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு நிலவியது

.