தமிழ்நாடு

டாஸ்மாக் 7000 கோடி வரி..... உத்தரவிட்ட உயர்நீதிமன்றம்......

Malaimurasu Seithigal TV

டாஸ்மாக் நிறுவனம்  7 ஆயிரத்து 986 கோடி ரூபாய் வரி செலுத்த வேண்டுமென வருமான வரித்துறை அனுப்பிய நோட்டீசிற்கு சென்னை உயர்நீதிமன்றம்  இடைக்காலத் தடை விதித்துள்ளது.

நோட்டீஸ் தள்ளுபடி:

கடந்த 2021-22ஆம் நிதியாண்டிற்கு  7 ஆயிரத்து 986 கோடியே 34 லட்ச ரூபாய்  வருமான வரி செலுத்த வேண்டும் என வருமான வரித் துறை அனுப்பியிருந்தது.  அந்த நோட்டீசை எதிர்த்து டாஸ்மாக் நிறுவனம் தொடர்ந்த வழக்கை தனி நீதிபதி தள்ளுபடி செய்தார்.  

2016-17ஆம் நிதி ஆண்டுக்கான மதிப்பீட்டு உத்தரவை எதிர்த்து இதேபோன்ற வழக்கு இரு நீதிபதிகள் அமர்வில் நிலுவையில் உள்ளதால், 2021-22ஆம் ஆண்டுக்கான மதிப்பீட்டு உத்தரவை எதிர்த்த வழக்கை தள்ளுபடி செய்வதாகவும், இரு நீதிபதிகள் அமர்வை அணுகுமாறும் உத்தரவிட்டிருந்தார்.

மேல்முறையீடு:

தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்து டாஸ்மாக் நிறுவனம் சார்பில் நீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்திருந்தது.

அந்த மேல்முறையீடு மனு நீதிபதிகள் ஆர். மகாதேவன் மற்றும் முகமது ஷபீக் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, வருமான வரித் துறை தரப்பில் 2016-17ஆம் ஆண்டில் மாநில அரசுக்கு டாஸ்மாக் நிறுவனம் மதிப்பு கூட்டு வரியாக செலுத்திய 14,000 கோடி ரூபாய் வரி விதிப்புக்கு உட்பட்டது என்றும்,  மாநில அரசு நிறுவனங்கள் சட்டப்படி  வருமான வரி செலுத்து வேண்டும் என்றும் தெரிவித்திருந்தது.

விசாரணை: 

டாஸ்மாக் நிறுவனம் சார்பில் மதிப்பு கூட்டு வரி செலுத்தியதற்கு வருமான வரி செலுத்த வேண்டிய அவசியம் இல்லை என்றும் வாதிடப்பட்டது.

இரு தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதிகள், வருமானவரித் துறை நோட்டீசுக்கு இரண்டு வார காலத்திற்கு தடை விதித்தும், வழக்கு குறித்து வருமானவரித் துறை பதிலளிக்க உத்தரவிட்டும், வழக்கின் விசாரணையை தள்ளிவைத்தனர்.

-நப்பசலையார்