தமிழ்நாடு

டாஸ்மாக் வரலாற்றில் முதன்முறையாக, கவுன்சிலிங் அடிப்படையில் பணி இடமாறுதல் ஆணை!!

Malaimurasu Seithigal TV

டாஸ்மாக் வரலாற்றில், முதல் முறையாக சிபாரிசின்றி கவுன்சிலிங் அடிப்படையில், 2444 பேருக்கு பணி இடமாறுதல் ஆணை வழங்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் மூடப்பட்ட 500 டாஸ்மாக் மதுபானக்கடைகளில் பணியாற்றியவர்களுக்கு கவுன்சலிங் மூலம் பணி மாறுதல் வழங்குவதற்கான நடைமுறை சமீபத்தில் வெளியானது. அதன்படி தமிழகத்தில் இருந்த 5,329 டாஸ்மாக் கடைகளில் 500 கடைகள் ஜூன் 22-ம் தேதி முதல் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டது. மேலும், அக்கடைகளில் பணியாற்றிய மேற்பார்வையாளர்கள், விற்பனையாளர்கள், உதவி விற்பனையாளர்களுக்கு பணி மாறுதல் தொடர்பான அறிவிப்பு வெளியிடப்பட்டது.

மூடப்பட்ட டாஸ்மாக் கடைகளில் பணியாற்றிய ஊழியர்களுக்கு கவுன்சிலிங் மூலம் காலிப் பணியிடங்கள் உள்ள கடைகளில் வேலை வழங்கப்படும் என்றும் கூறப்பட்டது. பணி மாறுதல், பணி உயர்வு உள்ளிட்டவற்றில் கடந்த கால ஆட்சிகளின் முறைகேடுகள்  பலவற்றிற்கு முடிவுகட்டவே ஆவின் மற்றும் அரசு போக்குவரத்து கழகத்தின் வேலைவாய்ப்பிற்கு கூட தேர்வு நடந்தப்படும் நடைமுறை கொண்டுவரப்பட்டது. 

ஏற்கனவே முன்னாள் அமைச்சர் நத்தம் விசுவநாதன் மற்றும் அவரது உதவியாளர்கள், ஒவ்வொரு டாஸ்மாக் கடைகளிலும் உள்ள காலி பணியிடங்களுக்கு, பல லட்சங்களை லஞ்சமாக பெற்றுக்கொண்டு, பரிந்துரை கடிதம் மூலம், பனி நியமனம் செய்துள்ளதாக குற்றசாட்டுகள் எழுந்திருந்தன.

இந்நிலையில், டாஸ்மாக் வரலாற்றில், முதல் முறையாக சிபாரிசின்றி கவுன்சிலிங் அடிப்படையில், 2444 பேருக்கு பணி இடமாறுதல் ஆணை வழங்கப்பட்டுள்ளது. அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் முயற்சியால், கவுன்சிலிங் அடிப்படையில் வெளிப்படைத் தன்மையுடன் பணி மாறுதல் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.