தமிழ்நாடு

"மாணவர்களின் ஒவ்வொரு செயல்பாட்டிற்கும் ஆசிரியர்களை குறைகூற முடியாது.." - சென்னை உயர்நீதிமன்றம்

Malaimurasu Seithigal TV

தங்களது பிள்ளைகள் மீதான கடமையையும், பொறுப்பையும் உணர்ந்து, வீட்டிலும், சமூகத்திலும் பிள்ளைகளை பாதுகாத்து, கண்காணிப்பது பெற்றோரின் கடமை என சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளது.

நீலகிரி மாவட்டம் கூடலூரில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் 12ஆம் வகுப்பு படித்த யுவராஜ், கடந்த 2017ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் தற்கொலை செய்து கொண்டார். மாணவனின் தலைமுடியை வெட்டியும், கால் சட்டையை கிழித்தும் தலைமை ஆசிரியர் துன்புறுத்தியதால் தான், தன் மகன் தற்கொலை செய்து கொண்டதாக கூறி தலைமை ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்கவும், 10 லட்ச ரூபாய் இழப்பீடு வழங்கவும் தமிழக அரசுக்கு உத்தரவிடக் கோரி மாணவனின் தாய் கலா கடந்த 2018 ஆம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் முன் விசாரணைக்கு வந்தபோது, அரசு தரப்பில் மாணவர்களுடைய ஒழுக்கத்தை கடைப்பிடிக்கும் வகையில் தலைமை ஆசிரியை நடந்து கொண்டதாகவும் குறிப்பிட்ட நீதிபதி, தலைமை ஆசிரியர் பணியில் இருந்த காலத்தில் பள்ளியின் தேர்ச்சி சதவீதம் 45 சதவீதத்திலிருந்து 90 சதவீதமாக உயர்ந்ததாகவும் தெரிவிக்கப்பட்டது.

இந்த புகார் குறித்து மாவட்ட தலைமை கல்வி அதிகாரி நடத்திய விசாரணையில், குற்றச்சாட்டுகள் தவறு என அறிக்கை அளிக்கப்பட்டதாகவும் அரசுத்தரப்பில் தெரிவிக்கப்பட்டது. தலைமை ஆசிரியர் ராபர்ட் தரப்பில், தற்கொலை செய்து கொண்ட யுவராஜ் ஒவ்வொரு மாதமும் 50 சதவீத நாட்கள் மட்டுமே வகுப்புகளுக்கு வருவார் என்றும், தனக்கு எதிரான புகார் பொய்யான புகார் என்றும், பணம் பறிக்கும் நோக்கில் வழக்கு தொடரப்பட்டுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டது.

அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, மாணவன் யுவராஜ் தற்கொலை தொடர்பாக மாவட்ட தலைமை கல்வி அதிகாரி மற்றும் காவல்துறை நடத்திய விசாரணையின் அடிப்படையில் பெற்றோரின் குற்றச்சாட்டில் உண்மை இல்லை என்று நிரூபணமாவதாக கூறி தாய் கலாவின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

மேலும், போதிய ஆதாரங்கள் இல்லாமல் ஆசிரியர் மற்றும் தலைமை ஆசிரியரை குறை கூறுவது ஏற்க முடியாது என்றும், மாணவர்களை ஒழுங்குபடுத்த கல்வித் துறை வகுத்துள்ள விதிகளை மீறும் போதுதான் அவர்களை தண்டிக்க முடியும் என்றும் குறிப்பிட்டுள்ளார். இதுபோன்ற பொதுவான குற்றச்சாட்டால் பள்ளியின் பெயரும், பிற மாணவர்களின் நலனும் பாதிக்கப்படுவதாகவும் உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.

மாணவர்களை நன்றாக படிக்கச் செய்யவும், ஒழுங்கம் பேணச் செய்யவும் முயற்சிக்கும் ஆசிரியர்களை ஊக்கக் குறைவுபடுத்தினால், அவர்கள் அர்ப்பணிப்பு உணர்வுடன் தங்களது கடமையை செய்ய மாட்டார்கள் என்றும் உத்தரவில் குறிப்பிட்டுள்ளார். மாணவர்களின் ஒவ்வொரு செயல்பாட்டிற்கும் ஆசிரியர்களை குறைக்கூற முடியாது எனவும் குறிப்பிட்டுள்ளார். பள்ளி அல்லது ஆசிரியர் மீது குற்றஞ்சாட்டுவதற்கு முன்பாக தங்களது பிள்ளைகள் மீதான கடமையையும், பொறுப்பையும் பெற்றோர்கள் உணர்ந்திருக்க வேண்டும் என்றும், வீட்டிலும், சமூகத்திலும் தங்களது பிள்ளைகளை பாதுகாத்து, கண்காணிப்பது அவர்களின் கடமை என்றும் நீதிபதி அறிவுறுத்தி உள்ளார்.