அதிமுக ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் முதல்வருமான ஓ.பன்னீர்செல்வத்தின் மனைவி விஜயலட்சுமி உடல்நல பாதிப்பு காரணமாக சென்னை பெருங்குடியில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்த நிலையில், திடீரென நேற்று மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார்.
இதனையடுத்து அவரது உடலுக்கு முதலமைச்சர் ஸ்டாலின், எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட பல்வேறு அரசியல் தலைவர்கள் நேரில் அஞ்சலி செலுத்தியதுடன் மனைவியை இழந்து வாடிய பன்னீர்செல்வத்திற்கு ஆறுதல் தெரிவித்தனர்.
இந்நிலையில் அவரது உடல் ஒ.பன்னீர்செல்வத்தின் சொந்த ஊரான தேனி மாவட்டம் பெரியகுளத்திற்கு எடுத்து செல்லப்பட்டு பொது மக்கள் அஞ்சலிக்கு வைக்கப்பட்டதை தொடர்ந்து மாலை இறுதி சடங்குகள் செய்யப்பட்டது.
அதன் பின்னர் பெரியகுளம் நகராட்சி மயானத்தில் அவரது உடல் தகனம் செய்யப்பட்டது. விஜயலட்சுமியின் இறுதி ஊர்வலத்தில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.