தமிழ்நாடு

தமிழகத்திற்கு தேவையான அனைத்து உதவிகளையும் அளிப்பதற்கு மத்திய அரசு தயார்...எல்.முருகன்

தமிழகத்திற்கு தேவையான அனைத்து உதவிகளையும் அளிப்பதற்கு மத்திய அரசு தயாராக இருக்கிறது என மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.

Malaimurasu Seithigal TV

சென்னை தி.நகர் பகுதியில், மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து குறைகளை கேட்டறிந்த பின் நிவாரண பொருட்களை வழங்கினார். அதன்பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறுகையில்,

 
கொரோனா காலத்தில் மற்ற கட்சிகள் பயந்து ஒதுங்கி இருந்த போது பாரதிய ஜனதா கட்சிதான் முன் நின்று மக்களுக்கு தேவையான சேவைகளை செய்ததாகவும், அதேபோல் தான் இந்த வெள்ளம் நேரத்தில் மக்களுக்கு தொடர்ந்து சேவைகளை செய்வதாகவும் கூறினார். 

மேலும் பிரதமர் நரேந்திரமோடி தமிழக முதலமைச்சரை தொடர்பு கொண்டு தமிழகத்திற்கு தேவையான உதவிகளை மத்திய அரசு செய்யும் என்று வாக்குறுதி அளித்திருந்தார். எனவே தமிழகத்திற்கு தேவையான அனைத்து உதவிகளையும் அளிப்பதற்கு மத்திய அரசு தயாராக இருப்பதாக எல்.முருகன் தெரிவித்தார்.

அதுமட்டுமின்றி 2015-ஆம் ஆண்டு பெரும் வெள்ளம் வந்தபோது ஒரேநாளில் அனைத்து நீரும் கடலுக்குள் சென்றது. அதனால் குடிநீர் பிரச்சனை ஏற்பட்டது என்றும், தற்போது இவ்வளவு தண்ணீர் வந்து இருக்கிறது, ஆனால் அதனை சேமிப்பதற்கும், பயன்படுத்துவதற்கு ஏதேனும் திருத்தங்கள் நம்மிடையே இருக்கிறதா என்றால் ஜீரோவாக தான் உள்ளது என்றார்.

அதேப்போல் சென்னைக்கு வடகிழக்கு பருவ மழை வரும் என்று அனைவருக்கும் தெரிந்திருந்த நிலையிலும், முன்கூட்டியே தூர்வாரும் பணிகளை நடத்தவில்லை என்பது தான் உண்மை என்று தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், இந்து, இந்துத்துவம் குறித்த உரிய விளக்கத்தை முதலில் ராகுல்காந்தி தெளிவுபடுத்த வேண்டும் என்றும் பேசினார்.