தமிழ்நாடு

உயிரிழந்த மாணவி குடும்பத்திற்கு ரூ.3 லட்சம் நிவாரணம் வழங்கி முதலமைச்சர் உத்தரவு!

Tamil Selvi Selvakumar

நீலகிரியில் சத்து மாத்திரை சாப்பிட்டு உயிரிழந்த மாணவியின் குடும்பத்திற்கு முதலமைச்சர் நிவாரணம் அறிவித்துள்ளார்.

நீலகிரி மாவட்டம் உதகை காந்தல் பகுதியில் அமைந்துள்ள உருது நடுநிலைப் பள்ளியில் கடந்த 6 ஆம் தேதி 4 மாணவிகள் அதிகளவு சத்து மாத்திரைகளை உட்கொண்டதால் உடல்நலம் பாதிக்கப்பட்டு கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர்.

அதில், ஜெய்பா பாத்திமா என்ற மாணவியின் உடல்நிலை மிகவும் மோசமடைந்ததால் உயர் சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் மூலம் கோவையிலிருந்து சென்னை மருத்துவமனைக்கு நேற்று இரவு அழைத்து செல்லப்பட்டார். ஆனால், செல்லும் வழியிலேயே ஜெய்பா பாத்திமா பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்த மாணவியின் குடும்பத்திற்கு 3 லட்சம் ரூபாயும், சிகிச்சையில் இருந்து வரும் மீதமுள்ள 3 மாணவிகளின் குடும்பத்தினருக்கு தலா 1 லட்சம் ரூபாயும் நிவாரணமாக வழங்க முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.