தமிழ்நாடு

தற்பொழுதெல்லாம் சீர்திருத்தத் திருமணங்கள் பரவலாக நடைபெறுகின்றன - முதலமைச்சர்!

Tamil Selvi Selvakumar

சீர்திருத்த திருமணத்தை தற்பொழுது பரவலாக எல்லோரும் ஏற்றுக் கொண்டுள்ளதாக  தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

தமிழ்நாடு முதலமைச்சரின் நேர்முக உதவியாளர் மணிவண்ணன் இல்ல திருமண விழா சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் நடைபெற்றது. இந்த திருமண விழாவில் கலந்து கொண்டு திருமணத்தை நடத்தி வைத்து மணமக்களை வாழ்த்திய பின் தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் மேடையில் உரையாற்றினார்.

அப்போது பேசிய அவர், அண்ணா தொடங்கி வைத்த சீர்திருத்த திருமணங்கள் தற்போது அதிகளவில் நடைபெற்று வருவதாகவும் சீர்திருத்த திருமணங்களைக் கண்டு யாரும் அச்சப்பட தேவையில்லை என்றும் கூறினார். மேலும், சீர்திருத்த திருமண விழாவை பரவலாக எல்லோரும் ஏற்றுக்கொண்டு வருவதாகவும் குறிப்பிட்டார். 

தொடர்ந்து மணமக்களுக்கு வேண்டுகோள் விடுத்த முதலமைச்சர், குழந்தை பெற்றுக்கொள்வது உங்களின் விருப்பம் என்றும், ஆனால், உங்களுக்கு பிறக்கும் குழந்தைக்கு அழகான தமிழ் பெயரை வைக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டவர், வீட்டிற்கு விளக்காய், நாட்டிற்கு தொண்டனாய் வாழ வேண்டும் என்று தனது வாழ்த்தினை தெரிவித்தார்.