தமிழ்நாடு

ரூ.25 கோடி மதிப்பில் 13 ஆயிரத்து 200 அரசுப் பள்ளிகளில் திட்டம் செயலாக்கம்...தொடங்கி வைத்தார் முதலமைச்சர்!

Tamil Selvi Selvakumar

திருச்சியில், பள்ளி மாணவர்களுக்கான 'வானவில் மன்றம்' திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் துவக்கி வைத்தார்.

சுற்றுப்பயணம் மேற்கொண்ட முதலமைச்சர்:

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், திருச்சி, பெரம்பலூர், அரியலூர் ஆகிய மாவட்டங்களுக்கு இரண்டு நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். அதன்படி இன்று காலை திருச்சி மாவட்டத்திற்கு  சென்ற முதலமைச்சர்,  காட்டூர் ஆதி திராவிடர் பெண்கள் உயர்நிலைப் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், ”வானவில் மன்றம்” திட்டத்தை துவக்கி வைத்தார்.  25 கோடி ரூபாய் மதிப்பில், 13 ஆயிரத்து 200 அரசுப் பள்ளிகளில் 'வானவில் மன்றம்' திட்டத்தை முதலமைச்சர் துவக்கி வைத்தார். திட்டத்தை தொடங்கி வைத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மாணவ மாணவியருடன் கலந்துரையாடினார்.

எங்கும் அறிவியல், யாவும் கணிதம் என்பதை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ள இந்த திட்டம், மாணவர்களிடையே அறிவியல் மனப்பான்மையை வளர்க்கவும், அறிவியல் மற்றும் கணிதம் குறித்த ஆர்வத்தை அதிகரிக்க உதவும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக ஆசிரியர்களுக்கு சிறப்புப் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.

பின்னர், நடமாடும் அறிவியல் ஆய்வக வாகனத்தையும், மோட்டார் சைக்கிள்களில் பயிற்சி அளிக்க செல்லும் தன்னார்வலர்களையும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கொடியசைத்து வழி அனுப்பி வைத்தார்.