தமிழ்நாடு

தி.மு.க. அரசின் ஊழலை விரைவில் மக்கள் பேசுவார்கள்... பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை பேட்டி... 

தமிழகத்தில் திமுக அரசு கட்டு, கமிஷன், கரப்ஷன் ஆகிய மூன்றுக்கும் முக்கியத்துவம் கொடுத்து செயல்பட்டு வருகிறது என்று பா.ஜ.க. தமிழகத் தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.

Malaimurasu Seithigal TV

திருநெல்வேலி மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள விமானத்தில் வந்த அவர் தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். 

தமிழகத்தில் திமுக அரசு கட்டு, கமிஷன், கரப்ஷன் ஆகிய மூன்றுக்கும் முக்கியத்துவம் கொடுத்து செயல்பட்டு வருகிறது. திட்டங்களில் நடைபெறும் வேலைகளில் 20% கமிஷன் பெறுகிறார்கள், முடிக்கப்பட்ட பணிகளுக்கு தொகை ஒதுக்கீடு செய்யும்போது 4% கமிஷனை பெறுகிறார்கள். தமிழகத்தில் ஒரு குடும்பமே ஆட்சி செய்து வருகிறது. வட்ட செயலாளர், கிளை கழக செயலாளர் என ஒருவரும் திமுக களத்தில் பணி செய்வது இல்லை. 

தமிழகத்தில் நடைபெற்று வரும் ஊழல்கள் பற்றி இன்னும் மூன்று, நான்கு மாதங்களில் தமிழக மக்கள் பேசத் தொடங்குவார்கள் என்ற அவர்,  தமிழக அரசு மத்திய அரசின் திட்டங்களை அப்படியே காப்பி எடுத்து அவற்றை மாநில அரசு திட்டம் என்ற பெயரில் புதிய வடிவில் செயல்படுத்தி வருகிறது. தமிழக அரசு புதிதாக எந்த ஒரு திட்டத்தையும் கண்டுபிடித்து செயல்படுத்துவதற்கான திறன் இருப்பதாக தெரியவில்லை  என அவர் குறை கூறினார்.

மத்திய அரசு 2024 ஆம் ஆண்டுக்குள் வீடு தோறும் குடிநீர் கொடுக்க வேண்டும் என்ற இலக்குடன்  செயல்படுத்தி வரும் திட்டத்திலும் தமிழகத்தில் திமுக கரப்ஷன் செய்கிறது. தமிழகத்தில் ஒரு சாமானிய மனிதன் தொழில் தொடங்குவதற்காக உரிமத்தை பெறுவதிலும் கரப்ஷன் முட்டுக்கட்டை இடுகிறது, இதை எல்லாம் தவிர்த்தால் தான் தமிழகம் வளர்ச்சி பெறும் என்று அவர் கூறினார். 

தமிழ்நாட்டில் உள்ள மத்தியஅரசின் காலிப்பணியிடங்கள் நடப்பதற்காக நிதியமைச்சர் உரிய திட்டத்தை அறிவிப்பார். தமிழக அரசின் கடன் சுமைகளுக்கு மத்திய அரசு பொறுப்பேற்க முடியாது தமிழக அரசு தமிழகத்தில் வருவாய் அதிகரிக்கக்கூடிய புதிய திட்டங்களை கொண்டு வர வேண்டும் என கேட்டுக் கொண்டார். 

தமிழகத்தில் காவல் துறைக்கு முழு சுதந்திரம் இல்லை. காவல்துறை திமுகவின் மாவட்ட செயலாளர் கையில் உள்ளது அதனால் தான் ஆணவ கொலைகள் அதிகரித்து வருகிறது என்று குற்றஞ்சாட்டினார். தமிழகத்தில் புதிதாக தொழிற்பேட்டைகள் அமைக்கிறோம் என்கின்ற பெயரில் விவசாய நிலங்களை பாழ்படுத்துவதை ஏற்றுக்கொள்ள முடியாது என்று கூறினார்.