தமிழ்நாடு

உயிரிழந்த பிச்சைக்கார முதியவரின் வங்கி கணக்கில் 56 லட்சம் ரூபாய்: மக்களை வியப்பில் ஆழ்த்திய சம்பவம்...

மதுரையில் உயிரிழந்த பிச்சைக்கார முதியவர் 56 லட்சம் ரூபாய் வைத்திருந்த சம்பவம், அப்பகுதி மக்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

Malaimurasu Seithigal TV

மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை அருகில் கடந்த சில ஆண்டுகளாக பிச்சை எடுத்துவந்த முதியவர், மருத்துவமனை நுழைவு வாயில் முன்பு இயற்கையான முறையில் இறந்து கிடந்தார். இதுகுறித்து தகவலறிந்த காவல் துறையினர், முதியவரின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனையடுத்து அவரிடம் இருந்த பையில் இரண்டு வங்கி பாஸ்புக் இருந்துள்ளது.

அதனைப் பரிசோதித்த போது கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, அந்த முதியவர் தமது வங்கிக் கணக்கில் இருந்து 36 லட்ச ரூபாய் எடுத்ததும், தற்போது அவருடைய வங்கிக் கணக்கில் 20 லட்ச ரூபாய் இருப்பதும் தெரிய வந்தது. இதனையறிந்த அப்பகுதி மக்கள் வியப்பில் உள்ளனர்.

மேலும், விசாரணையில் அந்த முதியவர் மதுரை நாகமலை புதுக்கோட்டையில் உள்ள கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றியதும் கண்டுபிடிக்கப்பட்ட நிலையில், அவருக்கு ஏன் இந்த நிலை ஏற்பட்டது? குடும்பத்தார் வஞ்சித்து, விரட்டி விட்டனரா? அல்லது மனநிலை பாதிக்கப்பட்டு இந்த நிலைக்கு தள்ளப்பட்டாரா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.