தமிழ்நாடு

நெக்ஸ்ட் தேர்வை மத்திய அரசு கைவிட வேண்டும்...பிரதமருக்கு முதலமைச்சர் கடிதம்!

Tamil Selvi Selvakumar

தேசிய மருத்துவத் தகுதித் தேர்வினை மத்திய அரசு கைவிடவேண்டும் என்று பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். 

எம்பிபிஎஸ் மருத்துவம் படித்து முடிக்கும் மாணவர்களுக்கு அடுத்த கல்வி ஆண்டு முதல் நேஷனல் எக்ஸிட் டெஸ்ட்  எனப்படும் நெக்ஸ்ட் (NEXT Exam) தேர்வு நடத்தப்பட உள்ளதாக தேசிய மருத்துவ ஆணையம் தெரிவித்துள்ளது. 

தேசிய மருத்துவ ஆணைய விதிகளின்படி, நெக்ஸ்ட் தேர்வு என்பது இறுதியாண்டு எம்பிபிஎஸ் மாணவர்களுக்கான தகுதித் தேர்வாகவும், முதுகலை மருத்துவப் படிப்புகளில் தகுதி அடிப்படையிலான சேர்க்கைக்கான நுழைவுத் தேர்வாகவும் இருக்கும் எனவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் தேசிய மருத்துவத் தகுதித் தேர்வு தொடர்பாக பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். இதுகுறித்து முதலமைச்சர் எழுதிய கடிதத்தில், நீட் தேர்வு ஏற்கெனவே மோசமான பாதிப்பினை ஏற்படுத்தியுள்ள நிலையில், நெக்ஸ்ட் தேர்வை அறிமுகப்படுத்துவது கிராமப்புற மற்றும் சமூகரீதியாக பின்தங்கிய மாணவர்களுக்கும், மாநில அரசின்கீழ் இயங்கும் மருத்துவக் கல்வி நிறுவனங்களுக்கும் பெரிய பாதிப்பினை ஏற்படுத்தும் என்பதால், நெக்ஸ்ட் தேர்வு முறையினைக் கைவிட வேண்டுமென்றும், தற்போதுள்ள முறையே தொடர வேண்டும் எனவும், முதலமைச்சர்  மு.க.ஸ்டாலின் தனது கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார்.