தமிழ்நாடு

சுத்திகரிப்பு நிலையங்களை மேம்படுத்த...அரசாணை வெளியிட்ட தமிழ்நாடு அரசு..!

Malaimurasu Seithigal TV

வேலூர் மாவட்டத்தில் இருந்து பிரிக்கப்பட்ட ராணிப்பேட்டை மாவட்டத்தில், பேர்ணாம்பட்டு ஆகிய இடங்களில் நான்கு சுத்திகரிப்பு நிலையங்கள் இயங்கி வருகின்றன. இந்த நான்கு நிலையங்களையும் மேம்படுத்தி புதிய தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதற்காக ராணிப்பேட்டையில் சிட்கோ-1ல் உள்ள சுத்திகரிப்பு ஆலை ரூ.102.57 கோடியிலும், ராணிப்பேட்டை சிட்கோ நிலை ஒன்றில் உள்ள ஆலை ரூ.65.77 கோடியிலும், பேர்ணாம்பட்டில் உள்ள டால்கோ ஆலை ரூ.55.16 கோடியிலும், ராணிப்பேட்டையில் சிட்கோ இரண்டாவது நிலையில் உள்ள ஆலை ரூ.34.60 கோடியிலும் புதுப்பிக்கப்படவுள்ளன. இந்த 4 ஆலைகளையும் மொத்தமாக ரூ.258.10 கோடியில் மேம்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த நான்கு ஆலைகளையும் மேம்படுத்துவதற்கான ஒட்டுமொத்த நிதியில் தமிழக அரசின் பங்காக 15 சதவீதம் அளிக்கப்படவுள்ளது. மத்திய அரசும் தனது பங்களிப்பு தொகைகளை வழங்கி வருகிறது. மத்திய, மாநில அரசுகள் இணைந்து நான்கு தவணைகளாக நிதிகளை விடுவிக்க உள்ளன.

அதன்படி, மத்திய அரசு தனது நான்கு தவணைத் தொகைகளில் முதல் பகுதியை விடுத்துள்ள நிலையில், தமிழக அரசும் தனது முதல் பகுதி தொகையான ரூ.30.17 லட்சத்தை விடுவித்துள்ளது. இந்த நிலையில், இரண்டாவது தவணைத் தொகையை விரைந்து விடுவிக்க வேண்டும் எனவும் மத்திய அரசிடம் கேட்டுக் கொள்ளப்பட்டு இருப்பதாகவும் அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.