Ammonia gas leak factory 
தமிழ்நாடு

“தொடர்ந்து உயரும் பலி எண்ணிக்கை” - அமோனியா கசிவு விவகாரத்தில் தனிப்படை விசாரணை.. உயிரிழந்தவருக்கு 2 லட்சம் நிவாரண தொகை அறிவிப்பு!

ஏற்கனவே 7 பேர் உயிரிழந்த நிலையில், தீவிர சிகிச்சை பெற்று வந்த ஒருவர் உயிரிழந்ததால் பலி எண்ணிக்கை 8 ஆக உயர்ந்தது..

Mahalakshmi Somasundaram

திருவள்ளூர் மாவட்டம், பெரியபாளையம் அருகே மஞ்சங்கரணையில் செயல்பட்ட தனியார் இறால் பதப்படுத்தும் தொழிற்சாலையில் ஏற்பட்ட அம்மோனியா வாயுக்கசிவு காரணமாக 7 உயிரிழந்ததாக சொல்லப்பட்ட  சம்பவம்  பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் சிகிச்சை பெற்று வந்த ஒருவர் உயிரிழந்ததைத் தொடர்ந்து பலியானோரின் எண்ணிக்கை 8 ஆக உயர்ந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இன்று காலை வடமாநிலங்களைச் சேர்ந்த தொழிலாளர்களுடன் சேர்ந்து தொழிற்சாலையில் 70-க்கும் மேற்பட்டோர் பணியில் இருந்தா நிலையில் குளிர்சாதனப் பிரிவில் பயன்படுத்தப்பட்ட அம்மோனியா வாயு குழாயில் ஏற்பட்ட கோளாறு காரணமாக, நச்சு வாயு திடீரென வெளியேறியது. 

சில நிமிடங்களில் வாயு தொழிற்சாலை முழுவதும் பரவியதை தொடர்ந்து  தொழிலாளர்களுக்கு  கடுமையான மூச்சுத்திணறல், கண் எரிச்சல் மற்றும் உடல்நல பாதிப்பு ஏற்பட்டுள்ளது. எனவே சுதாரித்துக்கொண்ட பலர் உயிர் பிழைக்க அலறியடித்தபடி வெளியேற முயன்றபோது, சிலர் மயங்கி விழுந்தனர். இது குறித்து தகவலறிந்த தீயணைப்புத் துறையினர், மீட்புப் படையினர் மற்றும் போலீசார் விரைந்து சென்று மீட்புப் பணிகளை மேற்கொண்டனர். பாதுகாப்பு உபகரணங்களுடன் தொழிற்சாலைக்குள் நுழைந்த மீட்புக் குழுவினர் பாதிக்கப்பட்டவர்களை வெளியே கொண்டு வந்து மருத்துவமனைகளுக்கு அனுப்பினர்.

பாதிக்கப்பட்டவர்கள் பெரியபாளையம் அரசு மருத்துவமனை, சுற்றுவட்டார மருத்துவமனைகள் மற்றும் சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனை ஆகியவற்றில் அனுமதிக்கப்பட்டனர். ஏற்கனவே 7 பேர் உயிரிழந்ததாக சொல்லப்பட்ட  நிலையில், தீவிர சிகிச்சை பெற்று வந்த ஒருவர் உயிரிழந்ததால் பலி எண்ணிக்கை 8 ஆக உயர்ந்தது என தகவல் வெளியாகின ஆனால்  தற்போது செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் அதிர்ப்பூர்வமாக இரண்டு பேர் மட்டுமே உயிரிழந்ததாக தெரிவித்துள்ளார். இன்னும் பலர் மருத்துவ கண்காணிப்பில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.தொடர்ந்து இந்த சம்பவத்தில் தலைமறைவாக இருந்த தொழிற்சாலை உரிமையாளர்கள் மோகன் மற்றும் ஜோசப் ஆகியோரை போலீசார் கைது செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

ammonia leak

வாயுக் கசிவின் தாக்கம் தற்போது வரை முழுமையாக கட்டுப்பாட்டுக்குள் வராததால், சம்பவ இடம் தேசிய பேரிடர் மீட்புப் படையின் (NDRF) கண்காணிப்பில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அடுத்த சில நாட்களுக்கு தொழிற்சாலை வளாகத்தில் பாதுகாப்பு ஆய்வுகள் மேற்கொள்ளப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.  மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் சம்பந்தப்பட்ட துறைகளின் அனுமதி கிடைக்கும் வரை தொழிற்சாலை செயல்படக்கூடாது என அரசு உத்தரவிட்டுள்ளது. பாதுகாப்பு நடைமுறைகள் முறையாக பின்பற்றப்பட்டதா, விபத்துக்கு என்ன காரணம் என்பதைக் கண்டறிய அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான அனைத்து மருத்துவ உதவிகளும் உடனடியாக வழங்கப்பட வேண்டும் என்றும், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா இரண்டு லட்சம் நிவாரண நிதி வழங்கப்பட வேண்டும் என்றும்  முதலமைச்சர் ஜோசப் விஜய் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். இதையடுத்து தொழிலாளர் நலத்துறை அமைச்சர் பர்வேஸ் குமார், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் மற்றும் உயர் அதிகாரிகள் மருத்துவமனைகளுக்கு சென்று சிகிச்சை பெற்று வரும் தொழிலாளர்களை சந்தித்து நலம் விசாரித்தனர். மேலும், விபத்துக்கான காரணங்கள் மற்றும் பாதுகாப்பு விதிமுறைகள் பின்பற்றப்பட்டதா என ஆராய தொழிலகப் பாதுகாப்பு மற்றும் சுகாதாரத் துறை இயக்குநர் தலைமையில் சிறப்பு விசாரணைக் குழு அமைக்கப்பட்டுள்ளது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.