திருவள்ளூர் அடுத்த மப்பேடு அடுத்த நமச்சிவாயபுரம் பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி(27) இவர் தனது தாய் அதிக நேரம் போன் பேசுவதாகவும் மேலும் தான் சொந்தமாக. தொழில் செய்வதற்காக தனது தாய் ஜெயந்தியிடம் தினமும் மது போதையில் பணம் கேட்டு தொந்தரவு செய்துவந்ததாக கூறப்படுகிறது.
இதனால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளானார். இந்த நிலையில் நேற்று இரவு மீண்டும் தாய் மகன் இருவருக்கும் தகராறு ஏற்பட்டது.இதில் ஆத்திரமடைந்த தாய் ஜெயந்தி நேற்று விடியற் காலையில் மகன் கிருஷ்ணமூர்த்தி மீது தனது வீட்டிலிருந்த பெட்ரோலை ஊற்றி தீ வைத்துள்ளார்.
இதில் மிகுந்த தீக்காயங்களுடன் அலறி துடித்த கிருஷ்ணமூர்த்தியை அவரது மனைவி மற்றும் அக்கம் பக்கம் இருந்தவர்கள் திருவள்ளூர் அரசு பொது மருத்துவமனையில் சேர்த்தனர்.
அங்கு முதலுதவி சிகிச்சைக்கு பின் சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் மேல் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த கிருஷ்ணமூர்த்தி நேற்று நள்ளிரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்,
இது குறித்து கிருஷ்ண மூர்த்தியின் மனைவி பாரதி அளித்த புகாரின் பேரில் மகனை பெட்ரோல் ஊற்றி எரித்து கொலை செய்த தாய் ஜெயந்தியை மப்பேடு போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்தச் சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.