நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் காங்கிரஸ், விடுதலை சிறுத்தை, கம்யூனிஸ்டு கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில் தி.மு.க. நிர்வாகிகள் சிலர் போட்டி வேட்பாளர்களாக களமிறங்கி தலைவர், துணைத்தலைவர் பதவிகளை கைப்பற்றினர்.
அப்படி வெற்றி பெற்றவர்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்து கூட்டணி தர்மத்தை கடைபிடிக்க வேண்டும் என அக்கட்சித்தலைவர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்திருந்தார்.இந்த அறிவிப்புக்கு பிறகும் கூட்டணி கட்சிகளுக்கு பதவியை விட்டுக்கொடுக்காத தி.மு.க.வினர் மீது கட்சி மேலிடம் நடவடிக்கை எடுத்து வருகிறது. அந்த வகையில் தி.மு.க.வினர் 8 பேரை கட்சி மேலிடம் தற்காலிகமாக நீக்கம் செய்துள்ளது.
இதுகுறித்து தி.மு.க. பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிவிப்பில், கள்ளக்குறிச்சி வடக்கு மாவட்டம், சின்னசேலம் பேரூர்க் கழகச்செயலாளர் எஸ்.கே.செந்தில்குமார், தருமபுரி கிழக்கு மாவட்டம் பொ.மல்லாபுரம் பேரூர்க் கழக செயலாளர் உதயகுமார், பேரூராட்சி முன்னாள் தலைவர் புஷ்பராஜ் மற்றும் பொ.மல்லாபுரம் பேரூரைச் சேர்ந்த ஆனந்தன், ரகுமான் ஷான், மோகன்குமார், தஞ்சை வடக்கு மாவட்டம், வேப்பத்தூர் பேரூர்க் கழக துணைச் செயலாளர் ராமச்சந்திரன், ஒன்றிய இளைஞர் அணி துணை அமைப்பாளர் இரா.ராஜதுரை ஆகியோர் கழகக்கட்டுப்பாட்டை மீறியும், கழகத்திற்கு அவப்பெயர் ஏற்படும் வகையிலும் செயல்பட்டதால், அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்துப்பொறுப்பில் இருந்தும் தற்காலிகமாக நீக்கி வைக்கப்படுவதாக தெரிவித்துள்ளார்.