தமிழ்நாடு

கன மழையால் தத்தளிக்கும் திருப்பத்தூர் நகரம்..! ஆக்கிரமிப்புகளை அகற்ற கோரிக்கை...!

Malaimurasu Seithigal TV

திருப்பத்தூர் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள நீர் நிலைகள் கடந்த சில தினங்களாக பெய்த கன மழையின் காரணமாக நிரம்பி வருகின்றன. இதனைத் தொடர்ந்து வெளியேறி வரும் உபரி நீர் வடிகால் வழியாக பல்வேறு இடங்களை கடந்து திருப்பத்தூர் பெரிய ஏரிக்கு செல்கிறது.

இந்நிலையில் ஒரு சில இடங்களில் வடிகால்கள் அடைக்கப்பட்டு இருப்பதாலும் தனி நபர்கள் ஆக்கிரமிப்பு செய்திருப்பதாலும் குறிப்பிட்ட இடத்திற்கு மேல் செல்ல முடியாமல் கால்வாயில் இருக்கும் கழிவு நீர் சாலைக்குள் புகுந்துள்ளது.
கால்வாயில் இருந்து சாலைக்கும், சாலையிலிருந்து கால்வாய்க்கும் சுழற்சி முறையில் அங்கேயே நீர் தேங்கி வருவதால் பொதுமக்கள் மிகவும் சிரமத்துக்கு ஆளாகி வருகின்றனர்.

நகராட்சி நிர்வாகத்தின் அலட்சிய போக்காலும், ஆக்கிரமிப்புகளை அகற்றாமல்  இருப்பதாலும், திருப்பத்தூர் நகரமே தண்ணீரில் தத்தளிக்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் குற்றச்சாட்டை முன்வைக்கின்றனர்.

அதுமட்டுமின்றி நகராட்சியின் நீர் உறிஞ்சும் கனரக வாகனம் மற்றும் மோட்டார் மூலம் சாலைகளிலும் தரை பாலங்களிலும் தேங்கி நிற்கும் நீரை உடனடியாக வெளியேற்றாமல், கடமைக்கு நிறுத்தி வைக்கப்பட்டு இருப்பது இன்னும் வேதனை அளிப்பதாக கூறுகின்றனர்.