தமிழ்நாடு

அண்ணாமலை மீது அவதூறு வழக்கு தொடர்ந்த டி.ஆர்.பாலு...ஆர்.எஸ்.பாரதி பரபரப்பு போட்டி...!

Tamil Selvi Selvakumar

தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை மீது திமுக நாடாளுமன்ற குழு தலைவர் டி.ஆர்.பாலு அவதூறு வழக்கு தாக்கல் செய்துள்ளார். 

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் தி.மு.க. மூத்த நிர்வாகிகளின் சொத்து பட்டியலை கடந்த மாதம் 14-ந்தேதி பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்டார். எந்தவித ஆதாரமும் இல்லாமல் அவதூறு ஏற்படுத்தும் வகையில் தவறான புள்ளிவிவரங்களுடன் சொத்து பட்டியலை வெளியிட்டுள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் தரப்பில் அண்ணாமலைக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. 

மு.க.ஸ்டாலின் தரப்பில் அனுப்பப்பட்ட நோட்டீசில், அவதூறு குற்றச்சாட்டுகளை தெரிவித்ததற்காக மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும், 500 கோடி ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் கூறப்பட்டிருந்தது. இந்த நோட்டீசுக்கு அண்ணாமலை பதில் அனுப்பி இருந்தார். 

இந்தநிலையில், அண்ணாமலை மீது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரு தினங்களுக்கு முன்பு அவதூறு வழக்கு தொடர்ந்த நிலையில், திமுக எம்.பி. டி.ஆர். பாலுவும் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் 17-வது நீதித்துறை நடுவர் அனிதா ஆனந்திடம் அவதூறு வழக்கு தாக்கல் செய்துள்ளார்.

பின்னர் இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய திமுக அமைப்புச் செயலாளர் ஆர் எஸ் பாரதி, இதுவரை தி.மு‌.க மீது போடப்பட்ட அனைத்து வழக்குகளிலும் வெற்றி பெற்றோம் என்பதுதான் வரலாறு என கூறினார். தற்போது அண்ணாமலை மீது போடப்பட்ட வழக்கில் அவருக்கு ஓராண்டு தண்டனை கிடைக்கும் எனவும் அவர் தெரிவித்தார்.