தமிழ்நாடு

பல மாதங்களுக்கு பிறகு.. பாஜக-விற்கு நேரடி கேள்வி விடுத்த விஜய்! ஜனநாயகன் படத்தை வெளியிடுவதில் சூழ்ச்சி நடக்கிறதா?

“கூட்டணி கட்சிகளை ஏலத்தில் எடுத்துள்ளது திமுக, அது கள்ளபெட்டி கூட்டணி” என்றும்..

மாலை முரசு செய்தி குழு

அரசியல் கட்சிகள் பிரசாரத்தை தொடங்கி தேர்தல் களத்தை அடுத்த கட்டத்துக்கு கொண்டு சென்றுள்ள நிலையில் தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய்யும் இரண்டு நாட்களுக்கு பிறகு பிரசாத்துக்கு சென்றுள்ளார்.  திருச்சி கிழக்கு தொகுதியில் போட்டியிடுவதற்காக தனது வேட்புமனுவை தாக்கல் செய்ய திருச்சி வருகை தந்த தவெக தலைவர் திருச்சி மாநகராட்சியின் அரியமங்கலம் மண்டல அலுவலகத்தில் தேர்தல் அதிகாரி முத்து முருகேச பாண்டியனிடம் வேட்புமனுவை தாக்கல் செய்தார். அங்கிருந்து பிரசாரத்தை தொடங்கிய அவரை தவெக தொண்டர்கள் வெகுவாக வரவேற்றனர். அதையடுத்து திருச்சி கிழக்கு தொகுதிக்கு உட்பட்ட மரக்கடை பகுதியில் பிரசாரத்தை தொடர்ந்தார்.அங்கு எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி தனது பிரச்சார உரையை தொடங்கினார். வழக்கம்போல் தனது ஸ்டைலில் ‘எனது நெஞ்சில் குடியிருக்கும் நண்பர்களே’ என்று தொடங்கிய விஜய் மாநில மற்றும் மத்திய அரசுகளை கடுமையாக விமர்சித்தார்.

தற்போது நிலவி வரும் சிலிண்டர் தட்டுப்பாடு பிரச்சனையை குறிப்பிட்டு பேசிய விஜய் “இதனால் எவ்வளவு கஷ்டங்கள் எவ்வளவு பிரச்சனைகள், அவர்களாவது கொஞ்சம் உஷாரா இருந்திருந்த இந்த கேஸ் தட்டுப்பாட்டை கண்ட்ரோல் பண்ணி இருக்கலாம். அட்லீஸ்ட் இவங்களாவது உஷாரா இருந்திருந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்து இருக்கலாம், ஆனா நம்ம ஸ்டாலின் சாரா கேட்ட நமக்கு அதுக்கும் சம்பந்தமே இல்லையே என்பார். ரெய்டு வந்தால் டெல்லி செல்லும் முதலமைச்சர் கேஸ் தட்டுபாட்டிற்காக சென்றிருக்கலாம்” என்று மாநில அரசையும் மத்திய அரசையும் விமர்சித்திருந்தார். 

“பொய் வாக்குறுதிகளை கொடுத்து ஏமாற்றுவது தான் இவருடைய வேலை, நாங்கள் பொய் வாக்குறுதிகள் கொடுக்க மாட்டோம், சொன்னதை நிறைவேற்றுவோம்” என்றும் தெரிவித்திருந்தார். அதைத்தொடர்ந்து “விளாத்திகுளம் மாணவி டாய்லெட் வசதி இல்லாததால் தான் கொல்லப்பட்டார். அடிப்படை வசதியை கூட திமுக அரசு செய்யவில்லை” என்றும் குற்றம்சாட்டினார். "தீய சக்தி திமுக-வை தூக்கி எரிந்து விட்டு எங்களுக்கு வாய்ப்பளியுங்கள்” என்றும் “உங்கள் வேலைவாய்ப்பை பறித்த இந்த அரசை தூக்கி வீசி எறிவோம்" என்றும் சூளுரைத்தார். நகராட்சியில் 1000 கோடி ஊழல் நடந்துள்ளதாகவும் குற்றம்சாட்டியுள்ளார். அதைத்தொடர்ந்து அதிமுக மற்றும் திமுக கூட்டணி குறித்து பேசிய விஜய் “கூட்டணி கட்சிகளை ஏலத்தில் எடுத்துள்ளது திமுக, அது கள்ளபெட்டி கூட்டணி” என்றும் “திமுகவையும் நம்பாதீங்க பாஜகவையும் நம்பாதீங்க, ரெண்டு போரையும் நம்பாதீங்க” என்று முதல் முறையாக பாஜகவை பற்றி விஜய் பேசியது குறிப்பிடத்தக்கது. திமுகவை 'பாதி கதர் கூட்டணி' என்றும் அதிமுகவை 'கொல்லைப்புற கள்ள கூட்டணி மற்றும் பாதி காவி கூட்டணி ” என்றும் கடுமையாக விமர்சித்தார்.

“ஜனநாயகன் படத்தை வெளியிடாமல் சூழ்ச்சி செய்கிறார்கள்” அது தேர்தலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என அரசு அஞ்சுவதாகவும் குறிப்பிட்டார். அதை தொடர்ந்து பேசிய விஜய் “நான்கு முனை போட்டி நாற்பது முனை போட்டின்னு எத்தனை முனை போட்டி வந்தாலும் இங்கு இருமுனை போட்டி ஒன்னு DMK  இன்னொன்னு TVK” என்று வழக்கம் போல் பஞ்ச் டயலாக் போட்டுள்ளார். பின்னர் விஜய் தொண்டர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் விதமாக தவெக கட்சியின் புதிதாக வெளியிடப்பட்ட பாடலை பாடி பிரசாரத்தை முடித்து வைத்தார்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.