தமிழ்நாடு

டிடிவி தினகரன் ஓ.பி.எஸ் சந்திப்பு...! இணைந்து செயல்பட முடிவு...!!

Malaimurasu Seithigal TV

அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரனை இன்று மாலை அவரது இல்லத்தில் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் சந்தித்துள்ளார்.

அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரனை அவரது இல்லத்தில் ஓ.பன்னீர்செல்வம் இன்று மாலை சந்தித்தார். அப்போது  ஓ.பன்னீர்செல்வம் டிடிவி தினகரன் மற்றும் பண்ருட்டி ராமச்சந்திரன் ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர்.

இச்சந்திப்பில், இரு இயக்ககங்களும் ஒன்றாக இணைந்து செயல்பட முடிவெடுத்துள்ளதாக பண்ருட்டி ராமச்சந்திரன் கூறினார். மேலும், ஒரே லட்சியத்தை அடைய தனித்தனியே செயல்பட்ட இரு இயக்கங்களும் இனி சேர்ந்து செயல்பட இருப்பதாகவும்  இடது கம்யூனிஸட் கட்சியும் வலது கம்யூனிஸ்ட் கட்சியும் எப்படி சேர்ந்து செயல்படுகிறார்களோ அது போல சேர்ந்து செயல்படுவோம் எனவும் தெரிவித்தார்.

தொடர்ந்து செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த டிடிவி தினகரன், "எனக்கும்  ஓ.பன்னீர்செல்வத்திற்கும் சுயநலம் எதுவும் கிடையாது. உண்மையான தொண்டர்கள் கையில் இந்த இயக்கம் இருக்க வேண்டும். கட்சியை பணபலத்தின் உதவியுடன் கைப்பற்றியவர்களிடமிருந்து மீட்டு உண்மையான தொண்டர்கள் கையில் கொடுப்போம்" எனக் கூறினார்.

அடுத்ததாக செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த ஓ.பன்னீர்செல்வம், "விரைவில் சசிகலாவை சந்திக்க உள்ளோம். கட்சியின் அனைத்து அடிப்படைத் தொண்டர்களும் இணைய வேண்டும். இனி ஒவ்வெரு சந்திப்பிலும் தொண்டர்களை சந்தித்து புதுப்பொலிவோடு கட்சியை நடத்த இருக்கிறோம்" எனக் கூறினார்.

முதலமைச்சராக இருந்து பதவி இறங்கும் போது டிடிவி தினகரன் அழுத்தம் கொடுத்ததாக ஓ.பன்னீர்செல்வம் முன்னர் கூறியதை சுட்டிக்காட்டி செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு கடந்த காலத்தை மறப்போம் என  ஓ.பன்னீர்செல்வம் பதிலளித்துள்ளார்.