தூத்துக்குடி: ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கடந்த 2018-ம் ஆண்டு மே 22-ம் தேதி நடைபெற்ற போராட்டம் வன்முறையானது. அப்போது கலவரத்தை அடக்க காவல் துறையினர் துப்பாக்கிச்சூடு நடத்தினர். அதில், 13 பேர் உயிரிழந்ததோடு, நூற்றுக்கு மேற்பட்டோர் காயமடைந்தனர்.
இதையடுத்து அதிமுக ஆட்சியில் நடைபெற்ற இச்சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒரு நபர் ஆணையம் அமைக்கப்பட்டது. இந்த ஆணையம் நடத்திய விசாரணை அறிக்கை, சட்டசபையில் இன்று ஈ.பி.எஸ் ஆதரவு எம்.எல்.ஏக்கள் இன்றி தாக்கல் செய்யப்பட்டது.
மேலும் படிக்க | இது மிகப்பெரிய அநீதி செயல்!!!- போராளி பாத்திமா பானு!!!
அதில், துப்பாக்கிச்சூடு நடத்துவதற்கு முன்பு, போராட்டக்காரர்கள் முறையாக எச்சரிக்கப்படவில்லை என்றும் அவர்களை எச்சரிக்க பயன்படுத்தும் Public Addressing System, அதாவது நன்றாக கேட்கக்கூடிய மெகா போன் பயன்படுத்தப்படவில்லை எனவும் சொல்லப்பட்டுள்ளது.
மேலும், அந்த அறிக்கையில் அப்போதைய தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் மற்றும் 3 வருவாய்த்துறை அலுவலர்கள் மீது துறை சார்ந்த நடவடிக்கை எடுக்கவும், இச்சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் உறவினர்கள், சட்டப்பூர்வ வாரிசுகளுக்கு ஏற்கனவே 20 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டுள்ள நிலையில், மேலும் 30 லட்சம் ரூபாய் வழங்க வேண்டும் எனவும், அவர்களது குடும்பத்து தாய்மார்களுக்கு அரசு வேலை வழங்கவும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.