தமிழக சட்டப்பேரவையின் திருத்தப்பட்ட பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று நடைபெற்றது. இதில், கோவையில் கல்லூரி மாணவர் அமுதன் கொல்லப்பட்ட விவகாரம் தொடர்பாக சிறப்பு கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டு வரப்பட்டு விவாதம் நடைபெற்றது. அப்போது தமிழகத்தில் அண்மைக்காலமாக அதிகரித்து வரும் கொலை, பாலியல் வன்கொடுமை மற்றும் சட்டம்-ஒழுங்கு சம்பவங்களை சுட்டிக்காட்டிய எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், 100 நாள் ஆட்சியின் சாதனைகளை அரசு விளம்பரப்படுத்தி வரும் நிலையில், மாநிலத்தின் சட்டம்-ஒழுங்கு நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக குற்றம்சாட்டினார். அமுதன் கொலை சம்பவத்தை மையமாகக் கொண்டு நடைபெற்ற இந்த விவாதம், சட்டப்பேரவையில் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் இதற்கு போதை பொருள் புழக்கத்தில் இருப்பது தான் காரணம் என்று குறிப்பிட்டார்.
அதற்கு பதிலளிக்க முயன்ற அமைச்சர் நிர்மல் குமார், “தமிழகத்தில் கடந்த 5 ஆண்டுகளில் நிலவிய போதை பொருட்கள் பற்றி நாம் அறிந்ததே.. இன்டர்நேஷனல் போதைப்பொருள் கடத்தல் மன்னன் ஜாபர் சாதிக் டெல்லியில் கைது செய்யப்பட்டார். அவருடன் அப்போதைய முதல்வர் குடும்பம் முதல் அமைச்சர் வரை தொடர்பில் இருந்தார்கள் என்று எல்லோருக்கும் தெரியும். ஜாபர் பற்றி தமிழகத்தில் எந்த வழக்கும் பதிவு செய்யவில்லை” என்று குற்றம் சாட்டிய அவர், “ ஜாபர் சாதிக் வழக்கு போன்ற எந்த குற்ற செயலும் நடக்காத வகையில் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என்பதை தெரிவிக்கிறேன்” என்று குறிப்பிட்டார்.
அதற்கு எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின், “அந்த வழக்கை அப்போதே விசாரித்து எங்கள் கட்சியில் இருந்து சம்பந்தப்பட்ட நபரை நீக்கிவிட்டோம்” என்றும் “ஆனால் இவர்களது ஆட்சியில் என்ன லட்சணம் என்று இன்றைக்கு மக்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்” என்றும் தெரிவித்தார். இன்றைக்கு ஒரு அமைச்சரே ஐபிஎல் ஆட்டத்தின்போது பவுடர் நுணுக்கி விட்டு மாத்திரை நுணுக்கினேன் என்று கதை விட்டார்; அவரிடம் காவல்துறை விசாரணை நடத்தியதா? வீடியோ தொடர்பாக அமைச்சரிடம் விசாரணை நடைபெற்றதா? என்று தவெக அமைச்சர் சரத்குமார் சர்ச்சையில் சிக்கிய கிரிக்கெட் மைதானத்தின் வீடியோ குறித்து கேள்விகளை முன்வைத்தார்.
அதற்கு, சட்டத்துறை அமைச்சர், சம்பந்தப்பட்ட எவரையும் நான் குறிப்பிடவில்லை என்றார். பின்னர் அமைச்சர் சரத்குமார் “ஸ்டேடியத்தில் என்ன நடந்தது என்பதை ஏற்கனவே விளக்கி விட்டேன்; நான் போதைப்பொருள் பயன்படுத்தினேன் என்றால், அப்போது திமுக அரசு தான் நடந்தது.. அப்போ அவர்கள் தான் ஸ்டேடியம் வாசலில் விற்றார்களா? என்றும் "ஆதாரம் இல்லாமல் மீண்டும் மீண்டும் தேவை இல்லாம பேசக் கூடாது” என்றார். இந்த விவகாரம் சட்டப்பேரவையில் கடும் விவாதத்தை ஏற்படுத்தியது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்