உதயநிதி ஸ்டாலின்: "நாங்களாக இருந்தால் நடவடிக்கை எடுத்திருப்போம்... சட்டம் ஒழுங்கு அமைச்சர் எங்கே?" - வெளிநாடப்புக்கு பிறகு பேசியது என்ன? 
தமிழ்நாடு

உதயநிதி ஸ்டாலின்: "நாங்களாக இருந்தால் நடவடிக்கை எடுத்திருப்போம்... சட்டம் ஒழுங்கு அமைச்சர் எங்கே?" - வெளிநடப்புக்கு பிறகு பேசியது என்ன?

"போதைப்பொருள் கடத்தல் கும்பலுக்கு காவல்துறையினர் அமுதன் பற்றிய தகவல்களைக் கொடுத்துள்ளனர். அந்த கும்பலைச் சேர்ந்த 20 பேர் அமுதன் அவர்களை அடித்து கொடூரமாக கொலை செய்துள்ளது." - உதயநிதி

மாலை முரசு செய்தி குழு

தமிழக சட்டமன்றத்தின் திருத்தப்பட்ட பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று நடைபெற்றது. இதில், கோவையில் போதைப்பொருள் கும்பலால் மாணவர் அமுதன் கொல்லப்பட்ட விவகாரம் குறித்து சிறப்பு கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டு வரப்பட்டு விவாதம் நடைபெற்றது.

இந்த விவாதத்தின் முடிவில் எழுந்த திமுக கொறடா, “எதிர்க்கட்சியினர் எழுப்பிய கேள்விகளுக்கு அரசு சார்பில் உரிய விளக்கம் அளிக்கப்படவில்லை என்பதைக் கண்டித்து நாங்கள் வெளிநடப்பு செய்கிறோம்” என்று தெரிவித்தார்.

இதையடுத்து, திமுக உறுப்பினர்கள் அனைவரும் அவையை விட்டு வெளிநடப்பு செய்தனர். பின்னர் வெளியே வந்த எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.

உதயநிதி ஸ்டாலின்

“சில நாட்களுக்கு முன்பு, கோயம்புத்தூர் ஹிந்துஸ்தான் கல்லூரியைச் சேர்ந்த 19 வயது மாணவர் அமுதன், போதைப்பொருள் கடத்தல் கும்பல் குறித்து காவல்துறையினரிடம் புகார் அளித்திருக்கிறார்.

மாணவர் அமுதன் யார் மீது போதைப்பொருள் கடத்தல் தொடர்பாக புகார் அளித்தாரோ, அந்தக் கும்பலுக்கு காவல்துறையினர் அமுதன் குறித்த தகவல்களை வழங்கியதாக அவரது குடும்பத்தினர் குற்றம்சாட்டியுள்ளனர். இதையடுத்து, அந்தக் கும்பலைச் சேர்ந்த சுமார் 20 பேர் அமுதனைத் தாக்கிக் கொடூரமாகக் கொலை செய்ததாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதேபோல், திருவொற்றியூரில் தனுஷ் என்ற மாணவர் போதைப்பொருள் புழக்கத்தைக் குறித்து தட்டிக் கேட்டதற்காக, சுமார் 30 பேர் கொண்ட கும்பலால் பட்டப்பகலில் கொலை செய்யப்பட்டதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

சட்டம் ஒழுங்கு அமைச்சர் விஜய்

இப்படி தொடர்ந்து போதைப்பொருள் காரணமாக சட்டம் - ஒழுங்கு பிரச்சினைகள் ஏற்பட்டு வருகின்றன. இவற்றை அரசின் கவனத்திற்குக் கொண்டு வருவதற்காகத்தான் கவன ஈர்ப்புத் தீர்மானத்தில் பேசியிருக்கிறோம். ஆனால், இதற்கு இந்த அரசிடம் சரியான பதில் இல்லை. மாறாக, எங்கள் மீது குற்றச்சாட்டுகளை முன்வைக்கின்றனர்.

‘உங்கள் ஆட்சியில் என்ன செய்தீர்கள்?’ என்று பழிபோடும் வழக்கத்தையே மேற்கொள்கிறார்கள்.

நான் கடந்த மூன்று மாதங்களாக இதைச் சொல்லிக்கொண்டிருக்கிறேன். எந்தத் துறைக்கு யார் அமைச்சர் என்பதே தெரியவில்லை. அனைத்து அமைச்சர்களுக்கும் கேள்விகளுக்கு விளக்கம் அளிக்க அதிகாரம் உள்ளது. ஆனால், இந்த ஆட்சியில் அந்தந்த துறைக்கான அமைச்சர்கள், துறை சார்ந்த கேள்விகளுக்கு பதில் அளிப்பதில்லை.

அமைச்சர் சரத்

இன்று சட்டம் - ஒழுங்கு குறித்து பேசிக்கொண்டிருக்கும்போது, இதற்குப் பொறுப்பேற்க வேண்டியவர் யார் என்பது மக்களுக்குத் தெரியும். அவர் இன்று அவைக்கு வரவில்லை. அவர் எந்தப் பதிலும் சொல்லவில்லை. இதைக் கண்டித்து திமுக வெளிநடப்பு செய்திருக்கிறது. அவை நடவடிக்கைகளில் மீண்டும் கலந்து கொள்வோம்." என்றார்.

தொடர்ந்து செய்தியாளர்களிடம் அமைச்சர் சரத்தின் போதைப்பொருள் பயன்பாடு குறித்த குற்றச்சாட்டு தொடர்பாகப் பேசிய அவர், "இந்த ஆட்சியில்தான் அந்த வீடியோ வெளியானது. எங்கள் ஆட்சியாக இருந்திருந்தால் நிச்சயம் நடவடிக்கை எடுத்திருப்போம்" என்றார்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்