தமிழ்நாடு

இல்லம் தேடி ஆவின் திட்டம்...! தொடங்கி வைத்த உதயநிதி...!!

Malaimurasu Seithigal TV

இல்லம் தேடி ஆவின் திட்டத்தின் மூலம் நடமாடும் ஆவின் ஐஸ்கிரீம் விற்பனை வாகனத்தை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

கோடை காலத்தை முன்னிட்டு ஆவின் நிறுவனம் சார்பில் இல்லம் தேடி ஆவின் திட்டத்தின் மூலம் நடமாடும் ஆவின் ஐஸ்கிரீம் விற்பனை வாகனம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. சென்னை மற்றும் சென்னையை சுற்றியுள்ள பகுதிகளில் ஆவின் ஐஸ்கிரீம், தயிர், மோர், லஸ்ஸி போன்ற பொருட்களை விற்பனை செய்வதற்காக 32 பேட்டரி வாகனங்களை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்றைய தினம் தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் பால்வளத்துறை அமைச்சர் நாசர் மற்றும் பால்வளத்துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.

மொத்தம் 40 லட்ச ரூபாய் செலவில் சுய தொழில் மற்றும் வேலை வாய்ப்பை ஊக்குவிக்கும் வகையில் முன்னுரிமை அடிப்படையில் பேட்டரி ஐஸ்கிரீம் விற்பனை வாகனங்கள் பெண்களுக்கு இன்றைய தினம் வழங்கப்பட்டது. சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளிலும் பொதுமக்கள் அதிகம் கூடும் கடற்கரைகள், வழிபாட்டுத் தலங்கள்,சுற்றுலாத் தலங்கள் போன்ற இடங்களிலும் ஆவின் ஐஸ்கிரீம் கிடைப்பதை உறுதி செய்யும் வகையில் இந்த திட்டம் தொடங்கப் பட்டுள்ளது.