தமிழ்நாடு

சின்ன வெங்காயத்துக்கு உரிய விலை கிடைக்காத நிலை.. இலவசமாக பறித்துச் செல்லலாம் - விவசாயி வேண்டுகோள்

திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே, உரிய விலை கிடைக்காததால் தோட்டத்தில் உள்ள வெங்காயத்தை மக்கள் இலவசமாக அள்ளி செல்லலாம் என விவசாயி ஒருவர் சமூக வலைதளத்தில் வீடியோ வெளியிட்டுள்ளது பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது.

Suaif Arsath

பழனி அடுத்த பனம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த விவசாயி சிவராஜ் என்பவர் இரண்டு ஏக்கரில் சின்ன வெங்காயம் சாகுபடி செய்துள்ளார்.

தற்போது ஒரு கிலோ சின்ன வெங்காயம் 7 ரூபாய்க்கு மட்டுமே விற்பனையாகிறது. ஆனால், பறிப்புக் கூலி, பழனி உழவர் சந்தை அல்லது ஒட்டன்சத்திரம் காய்கறிச் சந்தைக்கு கொண்டு செல்ல போக்குவரத்துச் செலவு உள்ளிட்டவற்றை கணக்கிட்டால் கூடுதல் இழப்பே ஏற்படும் நிலை உள்ளது.

இதனால் மனமுடைந்த விவசாயி சிவராஜ்,  வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் இரண்டு ஏக்கர் அளவில் வெங்காயம் சாகுபடி செய்த நிலையில் போதிய விலை இல்லாததால் பொதுமக்கள் என்னுடைய தோட்டத்திற்கு  வந்து இலவசமாக வெங்காயத்தைப் பறித்துக் கொள்ளுங்கள்  எனக்  கூறியுள்ளார்.

இந்த வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வர, பாதிக்கப்பட்ட விவசாயிக்கு அரசு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்று பலரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.