தமிழ்நாடு

தமிழகத்தில் தடுப்பூசி சிறப்பு முகாம்கள் இனி நடைபெறாது - தமிழக சுகாதாரத் துறை அறிவிப்பு!!

தமிழகத்தில் இனி வியாழக்கிழமை மற்றும் சனிக்கிழமைகளில் நடைபெறும் தடுப்பூசி முகாம் நடைபெறாது என பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்புத்துறை அறிவித்துள்ளது.

Tamil Selvi Selvakumar

தமிழகத்தில் கொரொனா தொற்று பாதிப்பு அதிகமாக இருந்த போது தடுப்பூசி போடும் பணி தொடங்கியது. குறிப்பாக கடந்த 2021 ஜனவரி 16 ஆம் தேதி முதல் தடுப்பூசி செலுத்தும் பணி நடைபெற்று வருகிறது. தொடக்கத்தில் தடுப்பூசி செலுத்திக்கொள்ள ஆர்வம் காட்டாமல், தடுப்பூசி செலுத்திக் கொள்வோரின் எண்ணிக்கை குறைவாகவே இருந்தது.

அதனை அதிகரிக்க வேண்டும் என்பதற்காக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டது. குறிப்பாக அரசு மருத்துவமனையில் உள்ள தடுப்பூசி முகாம்கள்  24 மணி நேர தடுப்பூசி முகாம்களாக மாற்றப்பட்டது, அதன் பின் வார இறுதி நாட்களான ஞாயிற்றுக்கிழமைகளில் மெகா தடுப்பூசி முகாம் நடத்துவதற்கு தமிழக அரசு திட்டமிட்டது.

அதன்படி கடந்த செப்டம்பர் 12 ஆம் தேதி முதல் மெகா தடுப்பூசி முகாம் தமிழகம் முழுவதும் 50,000 இடங்களிலும், சென்னையில் 1600 இடங்களிலும் நடைபெற்று வந்தது. அதன்பிறகு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தடுப்பூசி முகாம்கள் சனிக்கிழமைக்கு மாற்றப்பட்டன. தமிழகத்தை பொறுத்தவரையிலும் கடந்த வாரம் வரை 27 மெகா தடுப்பூசி முகாம்கள் நடைபெற்றுள்ளன.

இந்த மெகா தடுப்பூசி முகாம்களில் 4 கோடிக்கும் மேற்பட்டவர்கள் முதல் மற்றும் இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்டிருப்பதாக சுகாதாரத்துறை தெரிவித்து இருந்தது. தற்போது கொரொனா தொற்று பாதிப்பு படிப்படியாக குறைந்து வரும் நிலையில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் அனைத்தையும் ஏப்ரல் ஒன்றாம் தேதி முதல் தளர்த்தி கொள்ளலாம் என மத்திய அரசு அறிவித்திருந்தது. அதன்படி தமிழகத்தில் போடப்பட்டிருந்த அனைத்து கட்டுப்பாடுகளையும் தமிழக அரசு தளர்த்தியுள்ளது. இதையடுத்து இனி தமிழகத்தில் தடுப்பூசி முகாம்கள் நடைபெறாது என மாநில சுகாரத்துறை அறிவித்துள்ளது.