தமிழ்நாடு

நீதிமன்றத்தில் அம்பேத்கர் படம் நீக்கம்; உயர் நீதிமன்ற உத்தரவிற்கு வைகோ கண்டனம்!

Malaimurasu Seithigal TV

நீதிமன்றத்தில் மகாத்மா காந்தி மற்றும் திருவள்ளுவரின் உருவப்படங்கள் மட்டுமே வைக்க வேண்டும் எனவும்  அம்பேத்கர் உள்ளிட்ட தலைவர்களின் நீக்கவும் உத்தரவிட்டு உயர் நீதிமன்ற பதிவாளர் அனுப்பிய சுற்றறிக்கைக்கு வைகோ கண்டனம் தெரவித்துள்ளார்

தமிழ்நாடு, புதுச்சேரியில் உள்ள நீதிமன்ற வளாகங்களில் மகாத்மா காந்தி மற்றும் திருவள்ளுவரின் உருவப்படங்கள் மட்டுமே வைக்க வேண்டும். மற்ற தலைவர்களின் படங்களை நீக்க வேண்டும் என அனைத்து மாவட்ட நீதிமன்றங்களுக்கு சென்னை, உயர்நீதிமன்ற பதிவாளர் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். இதனை கண்டித்து மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அவ்வறிக்கையில், உயர்நீதிமன்ற பதிவாளரின் சுற்றறிக்கை மூலமாக பல உயர்நீதிமன்றங்களில் டாக்டர் அம்பேத்கர் அவர்களின் உருப் படங்களை வைக்க வேண்டும் என்று வழக்கறிஞர்கள் சங்கம் முன்வைத்த வேண்டுகோள் மறுக்கப்பட்டுள்ளது. ஆலந்தூர் நீதிமன்ற வாயிலில் அமைக்கப்பட்டிருந்த அண்ணல் அம்பேத்கர் அவர்களின் உருச்சிலை இதன் காரணமாக அகற்றப்பட்டுள்ளது. காஞ்சி மாவட்ட முதன்மை நீதிபதி இதற்கான நடவடிக்கையை மேற்கொண்டுள்ளார் என தெரிவித்துள்ளார்.

மேலும், அரசமைப்புச் சட்டத்தை உருவாக்கிய அண்ணல் அம்பேத்கர் அவர்களின் உருவப்  படம் நீதிமன்றங்களில் இடம்பெறக் கூடாது என்ற புதிய போக்கு பல பிரச்சினைகளுக்கு வழிவகுத்துவிடும் என எச்சரித்துள்ள அவர் மற்ற தலைவர்களின் உருவப்படங்கள் வைக்கப்பட்டால் சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் என்ற உயர்நீதிமன்றத்தின் கருத்தும் ஏற்கதக்கது அல்ல என தெரிவித்துள்ளார்.

எனவே, புதிய ஆணையை சென்னை உயர்நீதிமன்ற பதிவாளர் திரும்பப் பெறுமாறும், திருவள்ளுவர், காந்தியார் ஆகிய படங்கள் வரிசையில் அண்ணல் அம்பேத்கர் அவர்களின் உருவப் படமும் இடம்பெற அனுமதிக்குமாறும்  உயர்நீதிமன்ற பதிவாளரை வலியுறுத்தியுள்ளார்.