தமிழ்நாடு

உச்சநீதிமன்ற வழக்கறிஞர்களுக்கு உயர்நீதிமன்ற நீதிபதி பதவி... வைகோ கண்டனம்...

உச்சநீதிமன்ற வழக்கறிஞர்களை மாநிலங்களின் உயர்நீதிமன்ற நீதிபதிகளாக நியமிப்பதற்கு வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார்.

Malaimurasu Seithigal TV
உச்சநீதிமன்ற வழக்கறிஞர்களை மாநிலங்களின் உயர்நீதிமன்ற நீதிபதிகளாக நியமிப்பதற்கு ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மாநில உயர் நீதிமன்றங்களின் செயல்பாடு, உரிமை மற்றும் அதிகார ஆள்வரை ஆகியவற்றைப் பறிக்கும் வகையில், உச்சநீதிமன்ற வழக்கறிஞர்களை மாநில உயர்நீதிமன்றங்களின் நீதிபதிகளாகத் தேர்வு செய்ய முனைவது இந்திய அரசியலமைப்புச் சட்டப்பிரிவு 217க்கு எதிரானது எனக் குறிப்பிட்டுள்ளார். 
இது ஒரு மாநில நீதிமன்றத்தின் செயல்பாடுகளை கட்டுப்பாட்டில் எடுக்கும் முயற்சியாகவே அமையும் என்றும், மாநில உயர்நீதிமன்றத்தில் மொழி புரியாத ஒரு வழக்கறிஞரை, உயர்நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கக் கூடாது எனவும், இந்தி பேசாத மாநிலங்களில், இந்தி பேசுபவர்களை அதிகாரத்தில் உட்கார வைக்க முயற்சிப்பதும் ஒரு வகை இந்தித் திணிப்பே எனவும் அவர் தெரிவித்துள்ளார்.