தமிழ்நாடு

"ஒரே நாடு ஒரே தேர்தல் என்பதின் அர்த்தம் ஒரே நாடு கடைசி தேர்தல் தான்" கி. வீரமணி!

Malaimurasu Seithigal TV

மத்திய அரசின் குல தொழிலை திணிக்கும் விஸ்வகர்மா யோஜனா திட்டத்திற்கு திராவிடர் கழகத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். 

குலக்கல்வி முறையை மறைமுகமாக கொண்டு வரும் முயற்சிதான் என்று குற்றம்சாட்டியுள்ள திராவிடர் கழகத்தின் தலைவர் கி. வீரமணி ஒன்றிய அரசுக்கு எதிரான பரப்புரை பயணத்தை நாகை அவுரி திடலில் இருந்து தொடங்கினார். 

அதைத்தொடர்ச்சியாக மயிலாடுதுறை பொதுக்கூட்டத்தில் பங்கேற்கும் அவர் தொடர் பரப்புரை பயணமாக மதுரையில் பிரச்சாரத்தை நிறைவு செய்ய உள்ளார். 

கூட்டத்தில் பேசிய திராவிடர் கழகத்தின் தலைவர் கி.வீரமணி கூறுகையில், குலத் தொழிலை ஊக்குவிப்பதில் அன்றைக்கு ஆச்சாரியார், இன்று RSS என்று விமர்சனம் செய்தார். மேலும், அன்றாடம் மோடி அரசின் அவலங்கள் நாளுக்குநாள் தொடர்வதால் எதிர்க்கட்சிகளுக்கு பேசுவதற்கு நேரமில்லை என்று கூறிய அவர், ஒன்றிய அரசின் குலத்தொழில் திணிப்பு திட்டத்தில் பாதிக்கப்படுவது கருப்பு சட்டை தோழர்களோ, திராவிட அமைப்பில் உள்ளவர்கள் கிடையாது காவி நிறம் பூசிய தோழர்கள்தான் என்று விமர்சனம் செய்தார்.

குலகல்வி திட்டத்தை மாற்றி விஷ்வ கர்ம திட்டம் என்று மாற்றி வைத்துள்ளார்கள் என்று புகார் தெரிவித்த அவர், காமராஜர், அண்ணா, கலைஞர், எம் ஜி ஆர் என அனைவரும் குலத்தொழிலுக்கு எதிராக இருந்து குல கல்வி திட்டத்தை ஒழித்து முழுநேர பள்ளி கூடத்தை திறந்தார்கள்.

மோடி வெற்றிபெற்றால் இதுதான் கடைசி தேர்தலாக இருக்கும் என்று கூறிய வீரமணி, ஒரே தேர்தல் ஒரே நாடு என்று மோடி சொல்வதன் பொருள் இதுதான் ஒரே தேர்தல் கடைசி தேர்தல் என்று அர்த்தம் என கூறினார்.