தமிழக வெற்றிக் கழகம் அரசமைத்த பிறகு முதல் முதலீட்டாளர் மாநாட்டை நடத்தியிருக்கிறது. இதில் 67,452 கோடி ரூபாய் முதலீடு மற்றும் 1,06,998 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் 97 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டு உள்ளதாக தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.
இதில் 55 புதிய (Greenfield) திட்டங்களும், 50 விரிவாக்கத் (Brownfield) திட்டங்களும் அடங்கும். தமிழகத்தில் தவெக அரசு ஆட்சிப் பொறுப்பேற்ற 100 நாள்களில் மொத்தம் ரூ.1,02,514 கோடி முதலீடுகள் ஈர்க்கப்பட்டு, 1,21,788 நபர்களுக்கு வேலைவாய்ப்புகள் உறுதியளிக்கப்பட்டுள்ளதாக தொழில்துறை அமைச்சர் கீர்த்தனா தெரிவித்தார்.
இம்மாநாட்டில் விண்வெளி, மின்னணுவியல், மோட்டார் வாகனம் மற்றும் ஜவுளி போன்ற பல்வேறு துறைகளைச் சேர்ந்த முன்னணி நிறுவனங்கள் ஒப்பந்தங்களை மேற்கொண்டுள்ளன.
முதலமைச்சர் விஜய் இந்த நிகழ்வில், 4,476 கோடி ரூபாய் முதலீடு மற்றும் 5,074 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் 8 திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி வைத்துள்ளார். 2,676 கோடி ரூபாய் முதலீடு மற்றும் 1,550 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் 5 திட்டங்களைத் தொடங்கி வைத்துள்ளார்.
777.74 கோடி ரூபாய் செலவிலான சிப்காட், டிட்கோ மற்றும் தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவனம், தமிழ்நாடு தொழில் துறை வீட்டு வளர்ச்சி ஆகிய நிறுவனங்களின் 2 திட்டங்கள் மற்றும் 13 புதிய கட்டடங்களைத் திறந்து வைத்ததுடன், 9 நிறுவனங்களில் பல்வேறு பணியிடங்களுக்குத் தெரிவுசெய்யப்பட்ட 20 நபர்களுக்குப் பணிநியமன ஆணைகளை வழங்கினார்.
புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ள முக்கிய திட்டங்கள் என்ன...
1. தூத்துக்குடியில் ஸ்கைரூட் ஏரோஸ்பேஸ் நிறுவனம், ஏவுகலன்களின் உற்பத்தி, சேமிப்பு, ஒருங்கிணைப்பு மற்றும் சோதனை வசதிகளை அமைக்க உள்ளது. இதற்காக 250 கோடி ரூபாய் முதலீடு செய்து, 500 நபர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்படவுள்ளது.
2. தூத்துக்குடியில் அக்னிகுல் காஸ்மோஸ் நிறுவனம், மீண்டும் பயன்படுத்தக்கூடிய திரவ உந்துவிசை ஏவுகலன்களின் ஒருங்கிணைப்பு மற்றும் தயாரிப்பு வசதிகளை அமைக்கவுள்ளது. இதற்காக 400 கோடி ரூபாய் முதலீடு செய்து, 1,500 நபர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்படவுள்ளது.
3. கிருஷ்ணகிரியில் அல்ட்ராவயலட் நிறுவனம், மின்சார இருசக்கர வாகனங்களுக்கான உற்பத்தி ஆலையை (OEM) அமைக்கவுள்ளது. இதற்காக 779 கோடி ரூபாய் முதலீடு செய்து, 4,000 நபர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்படவுள்ளது.
4. சென்னையில், அமெரிக்காவைச் சேர்ந்த Fortune 500 (தரவரிசை 292) நிறுவனமான சூப்பர் மைக்ரோ, சர்வர்கள் (Servers) உற்பத்தி மற்றும் ஒருங்கிணைப்பு மையத்தை அமைக்கவுள்ளது. இதற்காக 477 கோடி ரூபாய் முதலீடு செய்து, 150 நபர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்படவுள்ளது.
5. திருவள்ளூரில் ஜப்பானைச் சேர்ந்த YKK நிறுவனம், ஜிப்பர்கள் மற்றும் இணைப்பு சாதனங்கள் உற்பத்தி செய்யும் ஆலையை அமைக்கவுள்ளது. இதற்காக 1,651 கோடி ரூபாய் முதலீடு செய்து, 4,316 நபர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கவுள்ளது.
6. ஷைலி இன்ஜினீயரிங் ப்ளாஸ்டிக்ஸ் நிறுவனம், நுகர்வோர் மின்னணு சாதனங்களுக்கான உதிரிபாகங்களை உற்பத்தி செய்யும் ஆலையைத் தமிழ்நாட்டில் அமைக்கவுள்ளது. இதற்காக 500 கோடி ரூபாய் முதலீடு செய்து, 400 நபர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்படவுள்ளது.
7. ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ஆவிட் குழுமம், அடுத்த ஐந்து ஆண்டுகளில், தமிழ்நாட்டில் நகர்ப்புற உள்கட்டமைப்பு மற்றும் சுற்றுலா, சுகாதாரம், சுரங்க உபகரண உற்பத்தி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் முதலீடு செய்ய முன்வந்துள்ளது. முதற்கட்டமாக, 7,000 கோடி ரூபாய் முதலீடு மற்றும் 12,000 நபர்களுக்கு நேரடி மற்றும் மறைமுக வேலைவாய்ப்பு என்ற வகையில், மேற்கண்ட துறைகளில், திருவள்ளூர் மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் முதலீடு மேற்கொள்ளவுள்ளது.
8. ஜெர்மனியைச் சேர்ந்த உலகின் முன்னணி HVAC கம்ப்ரசர் உற்பத்தியாளரான BITZER, இந்தியாவில் தனது முதல் HVAC கம்ப்ரசர்கள் உற்பத்தி ஆலையை சுமார் 300 கோடி ரூபாய் முதலீட்டில் காஞ்சிபுரத்தில் அமைக்கிறது.
9. JK டயர் நிறுவனம், காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள தனது டயர் உற்பத்தித் திட்டத்தை 5,143 கோடி ரூபாய் முதலீடு மற்றும் 3,510 நபர்களுக்கு வேலைவாய்ப்பு என்ற வகையில், விரிவாக்கம் மேற்கொள்ளவுள்ளது.
10. ஜெர்மனி நாட்டைச் சேர்ந்த டைம்லர் நிறுவனம், தற்போது காஞ்சிபுரம் மாவட்டத்திலுள்ள சிப்காட் ஒரகடம் தொழிற்பூங்காவில், வணிக வாகனங்கள் உற்பத்தி மேற்கொண்டு வருகிறது. 4,000 கோடி ரூபாய் முதலீடு மற்றும் 400 நபர்களுக்கு வேலைவாய்ப்பு என்ற வகையில் வணிக வாகனங்களுக்கான வடிவமைப்பு, ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு, உற்பத்தி ஆகிய பணிகளுக்காக இந்த மையத்தை மேம்படுத்தவுள்ளது.
மேலும், வர்த்தகம், வணிகம் மற்றும் இருதரப்பு முதலீடுகள், இணையப் பாதுகாப்பு, செயற்கை நுண்ணறிவு மற்றும் மேம்பட்ட தொழில்நுட்பங்கள், செமிகண்டக்டர் துறையில் திறன் மேம்பாட்டுப் பயிற்சி மற்றும் தொழில்நுட்பப் பரிமாற்றம் ஆகிய துறைகளில், கஜகஸ்தான், நியூசிலாந்து மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகளைச் சேர்ந்த நிறுவனங்கள் மற்றும் அமைப்புகளுடன், தமிழ்நாடு 7 நிறுவன ரீதியான புரிந்துணர்வு ஒப்பந்தங்களை மேற்கொண்டுள்ளது.
இதில், WOWsemi நிறுவனம் கோயம்புத்தூரில் செமிகண்டக்டர் துறை திறன் மேம்பாட்டுப் பயிற்சி மையம் (Skilling Academy) அமைக்கத் திட்டமிட்டுள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்