தமிழ்நாடு

"விஜய்யின் அடுத்த பயணம் எங்கே? - போட்டுடைத்த நிர்மல்குமார்

கோடிக்கணக்கான பேருக்கு கல்வி வழங்கிய கிறிஸ்தவ கல்வி நிறுவனங்கள் இன்று நலிவடைந்துள்ளன...

மாலை முரசு செய்தி குழு

தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் நடைபெற்ற "சமத்துவ கிறிஸ்துமஸ்" விழாவில், அக்கட்சியின் முக்கிய நிர்வாகியான நிர்மல் குமார் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் திமுக அரசை கடுமையாக விமர்சித்ததோடு, த.வெ.க தலைவர் விஜய்யின் அடுத்தக்கட்ட சுற்றுப்பயணம் குறித்தும் முக்கியத் தகவல்களைப் பகிர்ந்து கொண்டார்.

"எங்கள் தலைவர் விஜய் தலைமையில் திட்டமிடப்பட்டுள்ள இந்த சமத்துவ கிறிஸ்துமஸ் விழாவில், அனைத்து தரப்பு மக்களும் கலந்து கொண்டுள்ளனர். சுமார் 1500 பேருக்கு ஏற்கனவே குறுஞ்செய்தி (SMS) மூலம் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அவர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டுள்ளனர். மதிய உணவுடன் இந்த விழா நிறைவடையும்," என்று நிர்மல் குமார் தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், "300, 400 ஆண்டுகளாக கோடிக்கணக்கான பேருக்கு கல்வி வழங்கிய கிறிஸ்தவ கல்வி நிறுவனங்கள் இன்று நலிவடைந்துள்ளன. அவர்களுக்கு திமுக அரசு கொடுத்த வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றவில்லை. சிறுபான்மை மக்களிடம் நம்பிக்கையை இழந்துவிட்ட பயத்தில்தான், திமுக இன்று ஆங்காங்கே கிறிஸ்துமஸ் விழாக்களை நடத்தி, தங்கள் கட்சிக்காரர்களையே அமரவைத்து கண்துடைப்பு நாடகம் ஆடுகிறது. ஓட்டுக்காக நாங்கள் இந்த விழாவை நடத்தவில்லை," என்று காட்டமாகத் தெரிவித்தார்.

விஜய்யின் அடுத்த பயணம் எங்கே? விஜய்யின் அடுத்த சுற்றுப்பயணம் சேலத்தில் இருக்குமா என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், "எல்லாமே காவல்துறையின் அனுமதியைப் பொறுத்துதான் உள்ளது. இடங்களை தேர்வு செய்து வருகிறோம். எங்கு அனுமதி மற்றும் இடம் கிடைக்கிறதோ, அங்கு உடனடியாக மக்களைச் சந்திக்கத் தலைவர் திட்டமிட்டுள்ளார். இடம் முடிவானதும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும்," என்று கூறினார்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.