தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள், மாநில அரசியலில் ஒரு பெரிய மாற்றத்தைக் குறிக்கின்றன. நடிகராக இருந்து அரசியல்வாதியாக மாறிய விஜய் தலைமையிலான தமிழக வெற்றி கழகம் (TVK), இந்தத் தேர்தலில் ஆச்சரியமான முன்னேற்றத்தை பதிவு செய்து, 108 இடங்களில் வெற்றி பெற்று சட்டமன்றத்தின் மிகப்பெரிய கட்சியாக உருவெடுத்துள்ளது. இது அவரது அரசியல் தொடக்கத்தில் ஒரு முக்கிய முன்னெடுப்பாக பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், ஆளும் திராவிட முன்னேற்ற கழகம் (DMK) எதிர்பாராத பின்னடைவை சந்தித்துள்ளது. குறிப்பாக, முதல்வர் மு.க. ஸ்டாலின் தனது பாரம்பரிய கோட்டையாக கருதப்பட்ட கொளத்தூர் தொகுதியில் தோல்வி அடைந்தது கட்சிக்குள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 15 ஆண்டுகளாக இந்தத் தொகுதியை கட்டுப்பாட்டில் வைத்திருந்த ஸ்டாலினை, தவெக வேட்பாளர் வி.எஸ். பாபு 8,795 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார். 1989 முதல் தொடர்ச்சியாக வெற்றி பெற்று வந்த ஸ்டாலின், இந்தத் தோல்வியால் முதல் முறையாக சட்டமன்றத்துக்கு வெளியேற வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.
வி.எஸ். பாபு ஒரு காலத்தில் திமுக -வில் ஸ்டாலினுடன் நெருக்கமாக பணியாற்றியவர். வட சென்னை அரசியலில் முக்கியமான நபராக உயர்ந்த அவர், 2006-ல் புரசைவாக்கம் தொகுதியில் வெற்றி பெற்று சட்டமன்றத்திற்குள் நுழைந்தார். பின்னர் கட்சிக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் காரணமாக திமுக -வை விட்டு விலகிய அவர், பல அரசியல் மாற்றங்களுக்கு பிறகு 2026 தேர்தலுக்கு முன் விஜய்யின் தவெக -வில் இணைந்தார். தற்போது அவர் பெற்ற வெற்றி, தனிப்பட்ட அரசியல் எதிர்ப்பாக பார்க்கப்படுகிறது.
மொத்தமாக, 234 இடங்களைக் கொண்ட சட்டமன்றத்தில் தவெக 108 இடங்களுடன் முன்னிலையில் இருந்தாலும், தனி பெரும்பான்மை பெற முடியாத நிலை உருவாகியுள்ளது. திமுக 59 இடங்களுடன் இரண்டாம் இடத்திலும், அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் (AIADMK) 47 இடங்களுடன் மூன்றாம் இடத்திலும் உள்ளன. மற்ற கட்சிகளில் காங்கிரஸ் 5, பாமக 4 இடங்களையும் பெற்றுள்ளன. IUML, CPI, VCK மற்றும் CPI(M) ஆகியவை தலா 2 இடங்களையும், பாரதிய ஜனதா கட்சி (BJP), DMDK மற்றும் தினகரனின் AMMK தலா 1 இடங்களையும் பெற்றுள்ளன.
இந்த முடிவுகள், தமிழக அரசியலில் கூட்டணி அரசின் அவசியத்தை மீண்டும் முன்வைக்கின்றன. தவெக அரசு அமைக்க முயற்சிக்கும் நிலையில், தேர்தலுக்குப் பிந்தைய கூட்டணிகள் மாநில அரசியலின் அடுத்த கட்டத்தை தீர்மானிக்கப்போகின்றன. தற்போது காங்கிரஸ் தரப்பு தவெக உடன் கூட்டணி அமைக்க பேச்சுவார்த்தை நடத்த போவதாக செய்திகள் வெளியாகியுள்ளது. கூட்டணி ஆட்சி அமைக்க விஜய் அழைத்தால் ஆலோசித்து முடிவு எடுக்கப்படும் என கம்யூனிஸ்ட் கட்சிகள் தெரிவித்துள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.