"மாலை முரசு - கான்சிலிடிக்ஸ்" இணைந்து தமிழகம் முழுவதும் நடத்திய மாபெரும் கருத்துக்கணிப்பு முடிவுகள் குறித்து "Tamil Nadu Political League" நிகழ்ச்சியில் பெருந்துறை தொகுதி பற்றியும், வரும் சட்டமன்ற தேர்தலில் அங்கு வெற்றிப் பெற அதிகம் வாய்ப்புள்ள கூட்டணி எது? என்பது குறித்த தகவல்கள் இங்கே தொகுக்கப்பட்டுள்ளன. ஈரோடு மாவட்டத்தின் விவசாயம் மற்றும் ஜவுளித் தொழிலைச் சார்ந்த முக்கியத் தொகுதியான பெருந்துறை, பாரம்பரியமாக அதிமுகவின் வலுவான கோட்டையாகக் கருதப்படுகிறது. வரும் தேர்தலில் நிலவப்போகும் அரசியல் மாற்றங்கள் குறித்து "Tamil Nadu Political League" நிகழ்ச்சியில் விரிவான கள ஆய்வுத் தரவுகள் பகிரப்பட்டுள்ளன.
பெருந்துறை தொகுதியின் முக்கிய வாக்காளர் அடையாளங்களை ஆய்வு செய்ததில், 18 முதல் 25 வயதுடைய இளைஞர்கள் 11.6 சதவீதம் பேரும், 26 முதல் 40 வயதுடையவர்கள் 27.5 சதவீதம் பேரும் உள்ளனர். 41 முதல் 60 வயதுடையவர்கள் 38.6 சதவீதமாகவும், 60 வயதிற்கு மேற்பட்டவர்கள் 22.1 சதவீதமாகவும் உள்ளனர். சமுதாய ரீதியாகக் கொங்கு வேளாள கவுண்டர்கள் 40 சதவீதம் பேர் மிக வலுவாக உள்ளனர். இவர்களுடன் அருந்ததியர், நாடார் மற்றும் முதலியார் சமூகத்தினர் தலா 10 சதவீதம் எனப் பரவலாக உள்ளனர். இது 54 சதவீதம் கிராமப்புறங்களையும், 46 சதவீதம் நகர்ப்புறங்களையும் கொண்ட தொகுதியாகும்.
பெருந்துறை தொகுதி பற்றிய முழு தேர்தல் கருத்து கணிப்பை காணொளியாக காண : இங்கே கிளிக் செய்யவும்
இங்கு நிலவும் முக்கிய உள்ளூர் பிரச்சினைகளாகப் பெருந்துறை சந்தையில் நவீன உட்கட்டமைப்பு வசதிகள் இல்லாதது மற்றும் நகரில் நிலவும் கடும் போக்குவரத்து நெரிசல் பெரிய குறையாக உள்ளது. ஜவுளித் தொழிலால் ஏற்படும் சுற்றுச்சூழல் மாசு மற்றும் நீர்மட்டம் குறைந்தது விவசாயிகளைப் பெரும் பாதிப்பிற்கு உள்ளாக்கியுள்ளது. பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நவீன புற்றுநோய் சிகிச்சை மையம் அமைக்கப்பட வேண்டும் என்பது மக்களின் நீண்ட காலக் கோரிக்கையாக உள்ளது. மேலும், கிராமப்புற மாணவர்களுக்காக அரசு கலைக்கல்லூரி மற்றும் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் அமைக்கப்பட வேண்டும் என்பதும் மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
கடந்த 2021 சட்டமன்றத் தேர்தல் முடிவுகளின்படி, அதிமுகவின் ஜெயக்குமார் 45.1 சதவீத வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றார். திமுக கூட்டணியின் கே.கே.சி. பாலு 37 சதவீத வாக்குகளைப் பெற்றார். அந்தத் தேர்தலில் அதிமுக 125 பூத்களில் வலுவாகவும், திமுக 75 பூத்களில் வலுவாகவும் இருந்தது. சுமார் 92 பூத்கள் ஸ்விங் நிலையில் இருந்தன. தொடர்ந்து 2024 நாடாளுமன்றத் தேர்தலில் திமுக கூட்டணி 41.2 சதவீத வாக்குகளைப் பெற்ற நிலையில், அதிமுக கூட்டணி 47.2 சதவீத வாக்குகளைப் பெற்றுத் தனது ஆதிக்கத்தை நிலைநாட்டியது.
தற்போது 'கான்சிலிடிக்ஸ்' குழுவினர் நடத்திய 2026 தேர்தல் கணிப்பின்படி, பெருந்துறை தொகுதியில் அதிமுக கூட்டணியே மீண்டும் வெற்றி பெற அதிக வாய்ப்புள்ளது. வரும் தேர்தலில் அதிமுக கூட்டணி 40 சதவீத வாக்குகளைப் பெறும் என்று கணிக்கப்பட்டுள்ளது. ஆளும் திமுக கூட்டணி (தோப்பு வெங்கடாசலம் போட்டியிடும் பட்சத்தில்) கடும் போட்டியை அளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பூத் வாரியான தரவுகளின்படி, தற்போது அதிமுக 170 பூத்களில் மிக வலுவான நிலையில் உள்ளதாகவும், திமுக 120 பூத்களில் வலுவாக உள்ளதாகவும் புள்ளிவிவரங்கள் கூறுகின்றன. சுமார் 60 பூத்கள் ஸ்விங் நிலையில் உள்ளன.
இந்தத் தொகுதியில் அதிமுக மற்றும் திமுக இடையேயான வெற்றி வித்தியாசம் சுமார் 5 சதவீதமாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. அதிமுகவின் பாரம்பரிய வாக்கு வங்கி மற்றும் வேட்பாளரின் செயல்பாடு அவர்களுக்குச் சாதகமாக உள்ளது. இருப்பினும், திமுக சார்பில் களம் காணும் வேட்பாளரின் தனிப்பட்ட செல்வாக்கு தேர்தலில் சில மாற்றங்களை ஏற்படுத்தலாம். தற்போதைய நிலவரப்படி பெருந்துறை கோட்டையில் இரட்டை இலை சின்னமே முன்னிலையில் இருப்பதாக இந்தக் கருத்துக்கணிப்பு முடிவுகள் தெரிவிக்கின்றன.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.