தமிழ்நாடு

திருவிடைமருதூர் தொகுதியில் வெற்றி யாருக்கு? இம்முறை அசைத்துப் பார்க்குமா அ.தி.மு.க.? - "மாலை முரசு - கான்சிலிடிக்ஸ்" கருத்துக் கணிப்பு!

தொடர்ந்து மூன்று முறை தி.மு.க.வே இத்தொகுதியில் வெற்றி பெற்று வந்தாலும், வரும் 2026 தேர்தல் களம் மிகுந்த எதிர்பார்ப்பை ..

மாலை முரசு செய்தி குழு

"மாலை முரசு - கான்சிலிடிக்ஸ்" இணைந்து தமிழகம் முழுவதும் நடத்திய மாபெரும் கருத்துக் கணிப்பு முடிவுகள் குறித்து "Tamil Nadu Political League" நிகழ்ச்சியில் திருவிடைமருதூர் தொகுதி பற்றியும், வரும் சட்டமன்ற தேர்தலில் அங்கு வெற்றிப் பெற அதிகம் வாய்ப்புள்ள கூட்டணி எது? என்பது குறித்த தகவல்கள் இங்கே தொகுக்கப்பட்டுள்ளன. சோழ மண்டலத்தின் நுழைவு வாயிலாகக் கருதப்படும் இத்தொகுதி, தற்போது தமிழக அரசின் உயர்கல்வித் துறை அமைச்சராக இருக்கும் கோவி. செழியனின் சொந்தத் தொகுதியாகும். முற்றிலும் கிராமப்புறப் பின்னணியைக் கொண்ட இத்தொகுதி, மயிலாடுதுறை நாடாளுமன்றத் தொகுதியின் கீழ் வருகிறது. தொடர்ந்து மூன்று முறை தி.மு.க.வே இத்தொகுதியில் வெற்றி பெற்று வந்தாலும், வரும் 2026 தேர்தல் களம் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இத்தொகுதியின் முக்கிய வாக்காளர் அடையாளங்களைப் பொறுத்தவரை, 41 முதல் 60 வயது வரையிலான நடுத்தர வயதுடையவர்கள் 36 சதவீதத்துடன் தீர்மானிக்கும் சக்தியாக உள்ளனர். இளம் வாக்காளர்கள் (18-25 வயது) 12 சதவீதமும், 26 முதல் 40 வயதுடையவர்கள் 31 சதவீதமும் உள்ளனர். 60 வயதிற்கு மேற்பட்டவர்கள் சுமார் 19 சதவீதம் பேர் உள்ளனர். சாதி ரீதியான அடிப்படையில் வன்னியர் சமூகம் 30 சதவீதத்துடன் பெரும்பான்மையாக உள்ளனர். ஆதிதிராவிடர்கள் 27 சதவீதமும், தேவேந்திர குல வேளாளர்கள் 10 சதவீதமும் உள்ளனர். இஸ்லாமிய வாக்காளர்கள் 8 சதவீதத்துடன் இத்தொகுதியில் உள்ளனர். பெண் வாக்காளர்கள் 51 சதவீதத்துடன் ஆண்களை விடச் சற்றே முன்னிலையில் இருப்பது தேர்தலை நிர்ணயிக்கும் காரணியாக எதிர்பார்க்கப்படுகிறது.

திருவிடைமருதூர் தொகுதியின் முக்கிய உள்ளூர் பிரச்சினைகளாக விவசாயம் சார்ந்த சிக்கல்கள் முன்னிலை வகிக்கின்றன. விவசாயிகளுக்கான உரம் மற்றும் இடுபொருட்கள் தட்டுப்பாடு, செயற்கையாக உருவாக்கப்படும் உரத் தேவை போன்றவை விவசாயிகளிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளன. காவிரி ஆற்றின் கிளைக் கால்வாய்கள் நீண்ட நாட்களாகத் தூர்வாரப்படாமல் இருப்பதும், பல கிராமங்களில் பாதுகாக்கப்பட்ட சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதி இல்லாததும் பெரும் குறையாக உள்ளது. பெரிய அளவிலான தொழிற்சாலைகள் இல்லாததால் இளைஞர்கள் வேலை தேடி அண்டை மாவட்டங்களுக்கும் மாநிலங்களுக்கும் புலம்பெயரும் நிலை நீடிக்கிறது. மேலும், அரசு மருத்துவமனைகளில் போதிய மருத்துவர்கள் இல்லாதது மற்றும் சோழர் காலத்துக் கோயில்களை முறையாகப் பராமரிக்க வேண்டும் என்பதும் மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாக உள்ளது.

திருவிடைமருதூர் தொகுதியின் முழு கருத்து கணிப்பு பற்றி தெரிந்து கொள்ள: இங்கே கிளிக் செய்யவும்

கடந்த 2021 சட்டமன்றத் தேர்தல் முடிவுகளின்படி, தி.மு.க. வேட்பாளர் கோவி. செழியன் 48.60 சதவீத வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றார். அந்தத் தேர்தலில் அ.தி.மு.க.வின் யூனியன் வீரமணி 43 சதவீத வாக்குகளைப் பெற்று கடும் போட்டியை அளித்தார். இருவருக்கும் இடையிலான வெற்றி வித்தியாசம் வெறும் 5 சதவீதம் மட்டுமே இருந்தது. 2024 நாடாளுமன்றத் தேர்தலின் போது தி.மு.க. கூட்டணி 47.67 சதவீத வாக்குகளையும், அ.தி.மு.க. கூட்டணி 42 சதவீத வாக்குகளையும் பெற்றன. கடந்த தேர்தலில் தி.மு.க. 128 வாக்குச் சாவடிகளில் (Booths) பலமாகவும், அ.தி.மு.க. 102 சாவடிகளில் பலமாகவும் இருந்தன. சுமார் 64 சாவடிகள் Swing-ஆக இருந்தன.

"கான்சிலிடிக்ஸ்" குழுவின் 2026 தேர்தல் கணிப்பின்படி, திருவிடைமருதூர் தொகுதியில் தி.மு.க.விற்கும் அ.தி.மு.க.விற்கும் இடையே மிகக் கடுமையானப் போட்டி நிலவும். இந்த கருத்துக்கணிப்பின்படி தி.மு.க. 36 சதவீத வாக்குகளைப் பெற்று முதலிடம் பிடிக்கும் என்றும், அ.தி.மு.க. 34 சதவீத வாக்குகளுடன் மிக நெருக்கமாக இரண்டாம் இடத்தைப் பிடிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான வெற்றி வித்தியாசம் வெறும் 2 சதவீதம் மட்டுமே இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. தமிழக வெற்றி கழகம் இத்தொகுதியில் 15 சதவீத வாக்குகளைப் பெற்றுப் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும், நாம் தமிழர் கட்சி 6 சதவீத வாக்குகளைப் பெறும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

தற்போதைய நிலவரப்படி, தி.மு.க. 135 வாக்குச் சாவடிகளில் முன்னிலையில் உள்ளது. அ.தி.மு.க. 95 சாவடிகளில் வலுவாக இருக்கிறது. தற்போதைய அமைச்சர் கோவி. செழியன் சட்டமன்றத்தில் தொகுதிப் பிரச்சினைகளுக்காகவும், அரசின் பதில்களுக்காகவும் 32 முறை கேள்வி நேரங்களில் பங்கேற்றது அவருக்குச் சாதகமான அம்சமாகப் பார்க்கப்படுகிறது. இருப்பினும், தமிழக வெற்றி கழகத்தின் வருகை மற்றும் இளைஞர்களின் வாக்குகள் பிரியும் விதம் ஆளுங்கட்சிக்குச் சவாலாக அமையக்கூடும். சுமார் 25 வாக்குச் சாவடிகள் மட்டுமே தற்போது ஊசலாடும் நிலையில் (Swing) இருப்பதால், தேர்தல் பிரச்சாரத்தின் போது நடக்கும் மாற்றங்கள் திருவிடைமருதூர் தொகுதியின் முடிவைத் தீர்மானிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.