தமிழ்நாடு

லோன் வாங்கி தருவதாக பணம் வசூலித்த 2 பெண்களை மடக்கிய மகளிர் குழு பெண்கள்

Malaimurasu Seithigal TV

சாத்தான்குளம் அருகே மகளிர் சுய உதவிக் குழு பெண்களுக்கு தனிநபர் கடன் வாங்கி தருவதாக பண மோசடி செய்த 2 பெண்களை வங்கி முன்பு 100க்கும் மேற்ப்பட்ட பெண்கள் முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு...

லோன் வாங்கி தருவதாக வாய் சாலம்

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே உள்ள முதலூர் பகுதியில் அமைந்துள்ள பெண்கள் கல்வி மற்றும் வேலை வாய்ப்பு வளர்ச்சி மையம் என்ற வீட்ஸ் நிறுவனத்தின் மூலம் முதலூர் கனரா வங்கியில் தனி நபர் வங்கி கடன் 50 ஆயிரம் ரூபாய் வாங்கி தருவதாக சாத்தான்குளம் சுற்றுவட்டாரத்தில் உள்ள சுமார் 25க்கும் மேற்பட்ட கிராமங்களில் உள்ள மகளிர் குழுவில் உள்ள பெண்களிடம் நபருக்கு 1000 வீதம் வசூலித்துள்ளனர்.முதலூரிலுள்ள கனரா வங்கியில் தனிநபர் வங்கி கணக்கு துவங்குங்கள் உங்களுக்கு லோன் கண்டிப்பாக கிடைக்கும் என்று பொய் வாக்குறுதிகளை கொடுத்துள்ளனர்.

கையை விரித்த வாங்கி மேலாளர்

இதனை தொடர்ந்து சுமார் 300-க்கும் மேற்பட்ட பெண்கள் முதலூர் கனரா வங்கியில் புதிய தனி நபர் வங்கி கணக்கை தொடங்கி உள்ளனர்.இந்த நிலையில் இன்றும் முதலூர் வங்கிக்கு வங்கி கணக்கு தொடங்க வந்த பெண்கள் வங்கி மேலாளரிடம் இந்த லோன் சம்பந்தமாக பேசியபோது நாங்கள் யாருக்கும் லோன் தருவதாக தெரிவிக்கவில்லை என்று வங்கி மேலாளர் கையை விரித்து விட்டார்.

இதனால் பணம் வசூலித்த ஆஷா மற்றும் கீதா ஆகிய 2 பெண்களை இருசக்கர வாகனத்துடன் அனைத்து பெண்களும் கனரா வங்கியின் முன்பு  முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.தகவல் அறிந்து வந்த போலீசார் வீட்ஸ் நிறுவனத்திடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

வீட்ஸ் நிறுவனம் முற்றுகை

பின்பு பணத்தை திரும்ப ஒப்படைப்பதாக அவர்கள் ஒப்புக்கொண்டு சுமார் 50 பெண்களுக்கு மட்டும் பணத்தை திருப்பி செலுத்தினர்.மீதி உள்ள 50க்கும் மேற்பட்ட பெண்கள் வீட்ஸ் நிறுவனத்திற்கு சென்று எங்கள் பணத்தை திருப்பித் தரும் வரை நாங்கள் சும்மா விடமாட்டோம் என்று வீட்ஸ் நிறுவன உரிமையாளர் மற்றும் அலுவலர்களிடம் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

பெண்களை குறி வைத்து மோசடி செய்யும் இது போன்ற கும்பலை உரிய நடவடிக்கை எடுத்து கைது செய்ய வேண்டும் என்று பொதுமக்கள் சார்பாக கோரிக்கை விடுத்துள்ளனர்...