தமிழ்நாடு

நவம்பர் 9 வரை விண்ணப்பிக்கலாம்- பேருந்து டெண்டர் குறித்து அதிகாரிகள்...

அரசு போக்குவரத்துக் கழகங்களுக்கு 442 பேருந்துகளை தயாரித்து வழங்க விரும்பும் நிறுவனங்கள், நவம்பர் 9-ம் தேதி வரை டெண்டர் கோர விண்ணப்பிக்கலாம் என போக்குவரத்துத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Malaimurasu Seithigal TV

தமிழகத்தின் 8 போக்குவரத்துக் கழகங்களில் உள்ள காலாவதியான பேருந்துகளை ஈடு செய்யவும், மாசுபாட்டைக் கட்டுப்படுத்துவதற்காக பிஎஸ் 6 வகை பேருந்துகளை பயன்படுத்தும் வகையிலும் புதிய பேருந்துகளைக் கொள்முதல் செய்ய போக்குவரத்துத்துறை முடிவு செய்தது. அதன்படி, முதற்கட்டமாக சென்னை, மதுரை, கோவை கோட்டங்களுக்கு 442 பேருந்துகள் கொள்முதல் செய்யப்படவுள்ளன.  

இந்த 442 பேருந்துகளில் 242 பேருந்துகள் சென்னையிலும், தலா 100 பேருந்துகள் கோவை, மதுரையில் இயக்கப்படவுள்ளன. கேஎப்டபிள்யூ திட்டத்தின் கீழ் வாங்கப்படும் இந்த பேருந்துகள், டீசல் மூலம் இயங்கும் குளிர்சாதன வசதியில்லா தாழ்தள வகை பேருந்துகளாகும்.

இது தொடர்பான டெண்டர் அறிவிப்பு கடந்த ஆகஸ்ட் மாதம் வெளியிடப்பட்டது. 

நீண்ட நாள் கழித்து பேருந்துகள் தயாரிப்பதற்கான ஒப்பந்த அறிவிப்பு வெளியிடப்பட்டதால், இந்த டெண்டரில் பங்கேற்க உள்நாட்டு, பன்னாட்டு நிறுவனங்கள் விண்ணப்பித்து வந்தன. இவ்வாறு ஒப்பந்தம் கோர விண்ணப்பிப்பதற்கான காலக்கெடு அக்.12-ம் தேதி வரை  வழங்கப்பட்டிருந்தது.

தற்போது டெண்டரில் பங்கேற்பதற்கான விண்ணப்பங்களை சமர்ப்பிக்க நவம்பர் 9ம் தேதி வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவகாசத்தை நீட்டிப்பதன் மூலம் ஏராளமான நிறுவனங்கள் டெண்டரில் போட்டியிட வாய்ப்புள்ளது என்றும் போக்குவரத்துத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.