உலகம்

மீண்டும் இலங்கைக்கு தனது விமான சேவையை தொடங்கிய ஏர் சைனா!

Malaimurasu Seithigal TV

கொரோனா காலத்தில், இலங்கைக்கு விமான சேவையை நிறுத்திய ஏர் சைனா, மீண்டும் விமான சேவையை ஆரம்பித்துள்ளது.

உலகம் முழுவது 2020ல் கொரோனா தொற்றுபரவிய நிலையில், உலகமெங்கும் விமானசேவை முடங்கியிருந்தது. இதனால், சுற்றுலாவை மட்டுமே நம்பியிருக்கின்ற நாடுகள் மிகுந்த பொருளாதார நெருக்கடியை சந்தித்தன. அண்மையில், இலங்கையும் மிகவும் மோசமான பொருளாத நெருக்கடியில் சந்தித்தது. இலங்கை மக்களும் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்தனர்.

இந்நிலையில், தற்போது உலகம் இயல்பு நிலைக்கு திரும்பி வரும் வேளையில், சீனாவின் 'ஏர் சைனா' ( Air China) விமான நிறுவனம் இலங்கையுடன் மீண்டும் விமான சேவையை ஆரம்பித்துள்ளது.

சீன தேசிய விமான சேவையின், CCA-425 என்ற விமானம் சீனாவின் சிச்சுவான் மாகாணத்தின் செங்டு சர்வதேச விமான நிலையத்திலிருந்து புறப்பட்டு நேற்று முன்தினம் (03) இரவு 08.20 மணிக்கு கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்துள்ளது.

இந்த விமானத்தில் 142 பயணிகளும் 9 விமான ஊழியர்களும்  பயணித்துள்ளனர். இந்த சீன தேசிய விமான சேவையின் விமானங்கள் ஒவ்வொரு வாரமும் ஞாயிறு, புதன், வெள்ளி   போன்ற நாட்களில் இரவு 08.55 மணிக்கு கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்து, அதே விமானங்கள் அன்றைய தினம் இரவு 10.15 மணிக்கு  கட்டுநாயக்கவில் இருந்து புறப்பட்டு சீனாவின் செங்டு சர்வதேச விமான நிலையத்தைச் சென்றடைகின்றன.

சீன தேசிய விமான நிறுவனம் சுமார்  3 வருடங்களுக்கு முன்பு இலங்கைக்கான விமான சேவையை தற்காலிகமாக இடைநிறுத்தியிருந்தது. நேற்றிரவு வந்தடைந்த முதலாவது விமானத்தை வரவேற்க இலங்கைக்கான சீனத் தூதுவர்  Qi Zhen Hong, சீன தேசிய விமான சேவையின் பிராந்திய முகாமையாளர்  Xue Jun உள்ளிட்டோர்  கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வருகை தந்திருந்ததாக விமான நிலைய தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், இலங்கை வந்தடைந்த சீன மக்களை வரவேற்கும் விதமாக, கலாச்சார உடை அணிந்து, கலைஞர்கள் நடனமாடி வரவேற்றுள்ளனர்.