Canada Indian Student Murder Live-in Relationship 
உலகம்

“கனடாவில் இந்திய மாணவி கழுத்து நெரித்துக் கொலை” - லிவின் காதலன் செய்த செயலால் அதிர்ச்சி.. உடலை கொண்டு வருவதில் ஏற்பட்ட சிக்கல்!

தமன்பிரீத் கவுரும் ரித்திஷ் குமாரும் லிவின் ரிலேஷன்ஷிப்பில் இருந்து வந்ததும், இருவருக்கும் இடையே...

Mahalakshmi Somasundaram

கனடாவில் உயர்கல்வி பயின்று வந்த பஞ்சாபைச் சேர்ந்த 23 வயது இந்திய மாணவி, தன்னுடன் லிவின் ரிலேஷன்ஷிப்பில் இருந்த இளைஞரால் கழுத்தை நெரித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் இந்திய வம்சாவளியினரிடையே பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக கனடா காவல்துறையினர் கொலை வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பஞ்சாப் மாநிலம் லூதியானா மாவட்டம் சம்ராலா பகுதியைச் சேர்ந்த 23 வயதுடைய தமன்பிரீத் கவுர், உயர்கல்வி பயில்வதற்காக சுமார் ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு மாணவர் விசாவில் கனடாவிற்கு சென்றிருந்தார். பின்னர் அங்கு தென்கிழக்கு எட்மண்டனின் சில்வர்பெர்ரி பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வீடு எடுத்து வசித்து படித்து வந்திருக்கிறார். இந்நிலையில் அவர் கடந்த (ஜூலை 9) ஆம் தேதி வீட்டில் படுகாயங்களுடன் உயிருக்கு ஆபத்தான நிலையில் அக்கம் பக்கத்தினரால் மீட்கப்பட்டார். உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட போதிலும், (ஜூலை 12) ஆம் தேதி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

இதையடுத்து, போலீசார் சந்தேக மரணம் என வழக்கு பதிவு செய்து அவரது உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். பின்னர் ஜூலை 14-ஆம் தேதி நடத்தப்பட்ட உடற்கூறாய்வில், தமன்பிரீத் கவுர் கழுத்தை நெரித்துக் கொலை செய்யப்பட்டிருப்பது உறுதியானது. இதனைத் தொடர்ந்து, அவரது மரணத்தை கொலை வழக்காக மாற்றிய கனடா காவல்துறையினர், இந்தியாவைச் சேர்ந்த 22 வயதான ரித்திஷ் குமார் என்பவரை கைது செய்தனர். முதற்கட்ட விசாரணையில், தமன்பிரீத் கவுரும் ரித்திஷ் குமாரும் லிவின் ரிலேஷன்ஷிப்பில் இருந்து வந்ததும், இருவருக்கும் இடையே ஏற்பட்ட தகராறு கொலையில் முடிந்திருக்கலாம் என்றும் போலீசார் சந்தேகிக்கின்றனர்.

இருப்பினும், இந்த சம்பவத்தின் உண்மையான பின்னணி குறித்து ரித்திஷ் குமாரிடம் தொடர்ந்து தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. இதற்கிடையில், உயிரிழந்த தமன்பிரீத் கவுரின் உடலை இந்தியாவிற்கு கொண்டு வர அவரது குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் GoFundMe தளத்தின் மூலம் நிதி திரட்டும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். வெளிநாட்டில் உயர்கல்வி பயின்று வந்த இந்திய மாணவி, தன்னுடன் வாழ்ந்த இளைஞராலேயே கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட இந்த சம்பவம், அவரது குடும்பத்தினரையும் இந்திய வம்சாவளியினரையும் பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.