மத்திய கிழக்கில் போர் பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், சீனா தனது அண்டை நாடுகளான பாகிஸ்தான் மற்றும் ஈரான் விஷயத்தில் கடைபிடிக்கப்போகும் இரட்டை நிலைப்பாடு குறித்து சில முக்கிய தகவல்கள் வெளியாகியுள்ளன. ஒருவேளை போர் மூண்டால், சீனா பாகிஸ்தானுக்கு முழுமையாக முட்டுக் கொடுக்கும் என்றும், ஆனால் அதே சமயம் ஈரானை நட்டாற்றில் கைவிட்டு வேடிக்கை பார்க்கும் என்றும் சர்வதேச அரசியல் நிபுணர்கள் கணித்துள்ளனர். சீனாவின் இந்தத் திடீர் மனமாற்றத்திற்குப் பின்னால் இருக்கும் சுயநல காரணங்களை உலக நாடுகள் இப்போது உற்றுநோக்கத் தொடங்கியுள்ளன.
சீனாவைப் பொறுத்தவரை பாகிஸ்தான் என்பது வெறும் நட்பு நாடு மட்டுமல்ல, அது சீனாவின் பல பில்லியன் டாலர் முதலீடுகள் அடங்கிய ஒரு முக்கியமான தளம். குறிப்பாக சீனா-பாகிஸ்தான் பொருளாதார மண்டலத் திட்டம் (CPEC) சீனாவின் உலகளாவிய வர்த்தகத்திற்கு மிக அவசியம். எனவே, பாகிஸ்தானுக்கு ஒரு ஆபத்து என்றால் சீனா தனது ராணுவ மற்றும் பொருளாதார பலத்தைப் பயன்படுத்தி நிச்சயம் அதைக் காப்பாற்றும். பாகிஸ்தானின் பாதுகாப்பு என்பது சீனாவின் ஆசிய ஆதிக்கத்திற்கு மிக முக்கியமானது என்பதால், எந்தச் சூழ்நிலையிலும் பாகிஸ்தானை சீனா விட்டுக் கொடுக்காது என்று நிபுணர் ஒருவர் விளக்கியுள்ளார்.
ஆனால் ஈரானின் நிலைமை அப்படியே தலைகீழாக உள்ளது. ஈரான் மீது இஸ்ரேல் அல்லது அமெரிக்கா தாக்குதல் நடத்தினால், சீனா வெறும் கண்டன அறிக்கைகளை மட்டுமே வெளியிடும் என்று கூறப்படுகிறது. ஈரானிடம் இருந்து சீனா கச்சா எண்ணெயை மலிவு விலையில் வாங்கினாலும், ஈரானுக்காக அமெரிக்கா போன்ற வல்லரசு நாடுகளுடன் நேரடியாகப் போரிட சீனா விரும்புவதில்லை. ஈரானுடனான உறவை சீனா வெறும் ஒரு வியாபாரமாக மட்டுமே பார்க்கிறது. போர் என்று வந்துவிட்டால் தனது சொந்த நலனைப் பாதுகாக்க ஈரானை சீனா அந்நிய நாடுகளிடம் காட்டி கொடுத்துவிட்டு ஒதுங்கிக் கொள்ளவே அதிக வாய்ப்புள்ளது.
மேலும், சீனாவிற்கு இப்போது ஈரானை விட சவுதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் போன்ற நாடுகளுடன் இருக்கும் வர்த்தக உறவே மிக முக்கியமாகத் தெரிகிறது. ஈரானுக்கு ஆதரவாகப் போரில் இறங்கினால், இந்த அரபு நாடுகளின் கோபத்திற்கு ஆளாக நேரிடும் என்று சீனா அஞ்சுகிறது. இதனால் போர் மேகங்கள் சூழும்போது ஈரான் முற்றிலும் தனிமைப்படுத்தப்படும் அபாயம் உள்ளது. சீனாவின் இந்த 'யூ-டர்ன்' கொள்கை, ஈரானுக்குப் பெரிய பின்னடைவாக அமையும் என்றும், ஆசிய அரசியலில் சீனா தனது காய்களை மிக சாமர்த்தியமாக நகர்த்தி வருவதாகவும் அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.