உலகம்

“ஈரானை கற்காலத்திற்கு கொண்டுச் செல்வேன்” டிரம்பின் 20 நிமிட பேச்சால் நம்பிக்கை இழந்த உலக மக்கள்.. தீவிரமடையுமா போர்?

அமெரிக்கா முதலீடு செய்த ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில், இதுவரை நடந்த 32 நாள் போர் மிகவும் குறைவானது" என்று..

மாலை முரசு செய்தி குழு

அமெரிக்க மக்களே டிரம்பிற்கு எதிராக போர்க்கொடி தூக்கியுள்ளதை அடுத்து, ஈரான் மீதான போருக்கும், அதிபர் டொனால்ட் டிரம்பின் நடவடிக்கைகளுக்கும் எதிராக, அமெரிக்கா மற்றும் ஐரோப்பா முழுவதும் சனிக்கிழமை அன்று நடைபெற்ற "அரசர்கள் வேண்டாம்" பேரணிகளில் மக்கள் திரளாக கலந்துகொண்டு போராட்டம் நடத்தினர். அதையடுத்து அமெரிக்காவில் சமீபத்திய கருத்துக் கணிப்புகளின் படி, அவரது ஜனாதிபதி பதவியின் மீது நம்பிக்கையை இழந்தது மட்டுமல்லாமல், அவரது புதிய போரின் மீதும் வெறுப்படைந்து , அது பொருளாதாரத்தில் ஏற்படுத்தும் தாக்கம் குறித்து ஆழ்ந்த கவலையில் இருப்பதாக மக்கள் தெரிவித்திருக்கிறார்கள். மத்திய கிழக்கிலும் உலகெங்கிலும் உள்ள மில்லியன் கணக்கான மக்கள், போர் எப்போது முடிவடையும் என்பதையும், உலகளாவிய பொருளாதார மந்தநிலையை அச்சுறுத்தும் வகையில் ஈரான் ஹோர்முஸ் ஜலசந்தியை மூடியது உள்ளிட்ட அதன் கொந்தளிப்பான பின்விளைவுகளை அவர் சரி செய்வாரா அல்லது எவ்வாறு சரி செய்வார் என்பதையாவது தெரிந்து கொள்ள விரும்புவதாக தெரிகிறது.

வெள்ளை மாளிகையின் கிராஸ் ஹாலில் அமெரிக்க அதிபர் டிரம்ப் ஆற்றிய 20 நிமிட உரையில், 47 ஆண்டுகளாக அமெரிக்காவை அச்சுறுத்தி வரும் ஈரானிய ஆட்சியின் "பயங்கரவாதிகள்" அணு ஆயுதத்தை வைத்திருப்பதை தன்னால் அனுமதிக்க முடியாது என்று வாதிட்டு, தான் ஏன் போருக்குச் சென்றேன் என்பதற்கு மிகவும் தெளிவான விளக்கத்தை அளித்தார். ஈரான் அணு ஆயுதத்தின் “வாசலில்” இருப்பதாகவும், அமெரிக்காவின் பெருநிலப்பரப்பைத் தாக்கக்கூடிய ஏவுகணையை அது விரைவில் பெற்றிருக்கக்கூடும் என்றும் ஜனாதிபதி கூறிய சில கூற்றுகள் , அமெரிக்க மற்றும் மேற்கத்திய உளவுத்துறை மதிப்பீடுகளுடன் முரண்பட்டதாக இருக்கிறது. இது எந்த வகையிலும் அமெரிக்கர்கள் நம்பும் விதமாக இல்லை.
“அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய நாடுகளின் அச்சமூட்டும் வான்வழித் தாக்குதலால் ஈரானின் இராணுவ பலங்களும், பிராந்தியத்தில் பேரழிவை ஏற்படுத்தும் அதன் திறனும், அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகளுக்கு அது ஏற்படுத்தும் அச்சுறுத்தலும் முற்றிலும் சிதைக்கப்பட்டு விட்டன” என்று அவர் நம்பத்தகுந்த வகையில் வாதிட்டார்.

ஆனால், போருக்கு ஒரு தெளிவான இறுதி முடிவை சுட்டிக்காட்ட ஜனாதிபதி அந்த உரையை பயன்படுத்துவார் என்று பார்வையாளர்கள் எதிர்பார்த்திருந்த நிலையில் அவர் அவ்வாறு செய்யத் தவறியது மட்டுமல்லாமல், ஒரு பெரிய இராணுவ மோதல் தீவிரமடைவதற்கான சாத்தியத்தையும் எழுப்பியுள்ளார். "அடுத்த இரண்டு முதல் மூன்று வாரங்களில், அவர்களுக்கு உரிய கற்காலத்திற்கு அவர்களைத் திரும்ப அழைத்துச் செல்வோம்," என்று அவர் கூறினார். மேலும், அமைதி ஒப்பந்தத்திற்கான தனது கோரிக்கைகளுக்கு தெஹ்ரான் இணங்கவில்லை என்றால், ஈரானின் ஒவ்வொரு மின் உற்பத்தி நிலையத்தையும் தாக்குவதாகவும், அதன் எண்ணெய் வசதிகளைக் குறிப்பதாகவும் அவர் அச்சுறுத்தினார்.

எனவே, போர் எந்தத் திசையில் செல்கிறது என்று கவலைப்படும் அமெரிக்கர்களுக்கும் அல்லது போர் தூண்டிய எரிசக்தி நெருக்கடியால் கலக்கமடைந்த உலகளாவிய முதலீட்டாளர்களுக்கும் அவரது உரை நம்பிக்கை அளிக்கவில்லை. ஈரான் முழுமையாகச் சரணடைவதற்கான சாத்தியமற்ற வாய்ப்பைத் தவிர, மோதலில் இருந்து வெளியேறுவதற்கான தெளிவான திட்டத்தை அதிபர் எந்த இடத்திலும் முன்வைக்கவில்லை. "தற்போதைய அமெரிக்காவின் ஈடுபாட்டைக் குறைத்து மதிப்பிடும் முயற்சியில், முதலாம் உலகப் போர், இரண்டாம் உலகப் போர், கொரியா, வியட்நாம் மற்றும் ஈராக் ஆகிய போர்களில் அமெரிக்கா முதலீடு செய்த ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில், இதுவரை நடந்த 32 நாள் போர் மிகவும் குறைவானது" என்று அவர் வாதிட்டார். ஆனால், இந்த ஒப்பீடுகள் மக்களின் மனதில் பெரும் கோபத்தையும் கேள்வியையும் உருவாக்கியது. இந்த உரை போர் நீண்ட காலம் நீடிக்க கூடும் என்பதை உணர்த்தியதாக இருந்தது.

மேலும் , அமெரிக்காவை விட அதிக அளவில் பாரசீக வளைகுடா எண்ணெய் இறக்குமதியை சார்ந்திருக்கும் அதன் ஐரோப்பிய நட்பு நாடுகளின் கையில்தான் இது இருக்கிறது என்றும்  எச்சரிக்கை. “ஈரான் தனது எண்ணெயை விற்க விரும்புவதால் அந்த நீர்வழிப்பாதை " இயற்கையாகவே திறந்து விடும்" என்றும் குறிப்பிட்டுள்ளார். ஈரானின் செயல்திறன் மிக்க முற்றுகையை வெளிநாடுகள் எளிதாக அகற்றிவிடலாம் என்று அதிபர் கூறினார். ஆனால், ஈரானின் ஏவுகணைகள் மற்றும் ஆளில்லா விமானங்கள் காரணமாக, வலிமைமிக்க அமெரிக்கக் கடற்படையின் அந்த முக்கியமான எண்ணெய் போக்குவரத்து பகுதியை இன்னும் கடந்து செல்ல முடியவில்லை. அவரின் இந்த உரை அமெரிக்க மக்கள் மற்றும் உலகளாவிய மக்களின் போர் முடிவு  குறித்த கேள்விகளுக்கு பதிலளிக்கும் என எதிர்பார்த்திருந்த நிலையில் அது மீண்டும் போரை நீடிக்கவே செய்யும் என பதிலளிக்கும் விதமாக இருந்தது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.