India to Russia: கண்டங்களைக் கடக்கும் நேரடி ரயில் - புதினின் ஐடியா பழிக்குமா? 
உலகம்

India to Russia Direct Train: கண்டங்களைக் கடக்கும் புதினின் ஐடியா பலிக்குமா?

இந்த முன்மொழியப்பட்ட இரயில் பாதையானது ரஷ்யாவில் தொடங்கி துர்க்மெனிஸ்தான், ஈரான், ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளைக் கடந்து இந்தியாவை வந்தடையும் வகையில் திட்டமிடப்படலாம்.

மாலை முரசு செய்தி குழு

ரஷ்யாவிலிருந்து இந்தியப் பெருங்கடல் வரை ஒரு புதிய இரயில் பாதையை அமைப்பதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய ரஷ்ய அரசு முன்மொழிந்துள்ளது.

ரஷ்யாவின் TASS செய்தி முகாமைக்கு பேட்டி அளித்த அவர், ஹோர்மூஸ் நீரிணை மற்றும் போஸ்போரஸ் வழித்தடங்களின் வழியாக சரக்குகளை கொண்டு செல்வதில் ஏற்படும் அபாயங்களைக் குறைக்க மாற்றுவழியாக இது அமையும் என்று பேசியுள்ளார்.

பன்னாட்டு வணிகத்திலும் வர்த்தகப் போக்குவரத்திலும் கடல் வழிகளே எப்போதும் பிரதான அங்கமாகத் திகழ்ந்து வருகின்றன. இதற்கு பல காரணங்கள் இருக்கின்றன.

ஹார்முஸ் ஜலசந்தி

ஆனால், உலக அரசியல் சூழல்கள் மற்றும் புவிசார் போர் பதற்றங்கள் காரணமாகக் கடல்சார் வர்த்தகப் பாதைகளில் அடிக்கடி தடங்கல்கள் ஏற்படுவதுண்டு. இத்தகைய சவால்களை எதிர்கொள்ளவும், வணிகச் சங்கிலியைத் தடங்கலின்றித் தொடரவும் உலக நாடுகள் மாற்றுப் பாதைகளைத் தேடி வருகின்றன.

உலகின் எண்ணெய் வர்த்தகத்தில் சுமார் 25 சதவீதமும், எல்.என்.ஜி (LNG) எரிவாயு விநியோகத்தில் 20 சதவீதமும் ஹார்முஸ் ஜலசந்தி வழியேதான் நடைபெறுகின்றன.

இதில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டால் அதற்கான விலையை பல உலக நாடுகள் கொடுக்க வேண்டியிருக்கிறது. சமீப காலங்களாக இதனைக் கண்கூடாகப் பார்த்து வருகிறோம்.

இந்த அபாயங்களைத் தவிர்க்கவே ரஷ்யா தரைவழி இரயில் பாதையைக் கையில் எடுக்கிறது.

ரயில்

ரஷ்ய துணைப் பிரதமர் மாரத் குஸ்னுலின் (Marat Khusnullin) தெரிவித்துள்ள தகவலின்படி, இந்த முன்மொழியப்பட்ட இரயில் பாதையானது ரஷ்யாவில் தொடங்கி துர்க்மெனிஸ்தான், ஈரான், ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளைக் கடந்து இந்தியாவை வந்தடையும் வகையில் திட்டமிடப்படலாம்.

இத்திட்டம் செயல்படுத்தப்படும் பட்சத்தில், ரஷ்யாவிற்கும் இந்தியாவிற்கும் இடையிலான தரைவழி வர்த்தகம் மற்றும் மத்திய ஆசிய நாடுகள் இடையிலான தொடர்பு புதிய உச்சத்தை எட்டும். வருங்காலத்தில் இரு நாடுகளுக்கு இடையேயான சுற்றுலா வாய்ப்புகளுக்கும் இது வழிவகுக்கும். ஆனால் இதற்காக ரஷ்யா மேலுள்ள நாடுகளின் ஒத்துழைப்பைப் பெற வேண்டு.

பாகிஸ்தான்-ஆப்கானிஸ்தான் இடையிலான தற்போதைய மோதல் இதற்கு முக்கிய சவாலாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கடல்சார் அபாயங்களைச் சமாளித்து, தெற்காசியாவையும் யூரேசியாவையும் பிணைக்கும் இந்த தரைவழிப் பாதை, சர்வதேச வர்த்தகத்தின் போக்கையே மாற்றியமைக்கும் ஒரு முக்கிய இராஜதந்திர நடவடிக்கையாகப் பார்க்கப்படுகிறது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்