உலகம்

“பூமியின் முகத்திலிருந்து ஈரான் துடைத்தெறிய படும்” - கடும் எச்சரிக்கை டிரம்ப் விடுத்த !

“ஈரான் அணு ஆயுதம் வைத்திருப்பதை எந்த நிலையிலும் அனுமதிக்க முடியாது”

Muthu Lakshmi

அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான போர் பதற்றம் மீண்டும் தீவிரமடைந்துள்ளது. அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப், “ஈரான் அணு ஆயுதம் வைத்திருப்பதை எந்த நிலையிலும் அனுமதிக்க முடியாது” எனக் கடுமையாக எச்சரித்துள்ளார். மேலும், அமெரிக்காவின் பாதுகாப்பு நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக செயல்படும் கப்பல்களுக்கு எதிராக ஈரான் தாக்குதல் நடத்தினால், அதற்கு மிகக் கடுமையான பதிலடி வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

குறிப்பாக, உலகின் மிக முக்கியமான வர்த்தக பாதைகளில் ஒன்றான ஹார்முஸ் ஜலசந்தி பகுதியை மையமாகக் கொண்டு இந்த பதற்றம் அதிகரித்துள்ளது. இந்த நீரிணை வழியாக உலகின் பெரும்பாலான எண்ணெய் போக்குவரத்து நடைபெறுவதால், இங்கு ஏற்படும் எந்த மோதலும் உலகளாவிய பொருளாதாரத்தையே பாதிக்கும் அபாயம் உள்ளது. வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களிடம் பேசிய டிரம்ப், “ஹோர்முஸ் நீரிணையில் அமெரிக்க கப்பல்களை ஈரான் குறிவைத்தால், அந்த நாடு பூமியின் முகத்திலிருந்து துடைத்தெறிய படும்” என்று கடுமையாக எச்சரித்தார். அதே நேரத்தில், வெளிப்படையாக கடுமையான நிலைப்பாட்டை கொண்டிருந்தாலும், ஈரான் தனிப்பட்ட முறையில் அமெரிக்காவுடன் உடன்பாடு மேற்கொள்ள விரும்புகிறது என்றும் அவர் குறிப்பிட்டார்.

இந்த பதற்றமான சூழ்நிலைக்கு முன்னதாக, ஐக்கிய அரபு அமீரக நாட்டின் ஃபுஜைரா நகரில் உள்ள எண்ணெய் நிலையம் மீது தாக்குதல் நடத்தப்பட்டதில் 3 இந்தியர்கள் காயமடைந்தனர். இந்த சம்பவம் உலக நாடுகளில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதற்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி கண்டனம் தெரிவித்து, பொதுமக்கள் மற்றும் முக்கிய உள்கட்டமைப்புகளை குறிவைத்து நடத்தப்படும் தாக்குதல்கள் ஏற்றுக்கொள்ள முடியாதவை என்று கூறினார்.

இத்தாக்குதலுக்கு ஈரான் தொடர்பு இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில், ஈரான் தனது நிலைப்பாட்டை விளக்கி, தங்களுக்கு எதிராக எந்த தாக்குதலும் நடத்தப்பட்டால் அதற்கு “மிக மோசமான பதிலடி” வழங்கப்படும் என்று எச்சரித்துள்ளது. இதனால் இரு நாடுகளுக்கும் இடையிலான மோதல் மேலும் தீவிரமடைந்துள்ளது. அந்நாட்டு வான் பாதுகாப்பு படைகள் ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களை தடுக்க நடவடிக்கை எடுத்துவருவதாகவும், பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களில் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்தச் சூழலில், டிரம்ப் தனது ‘Truth Social’ தளத்தில் வெளியிட்ட பதிவில், “ஈரான் தொடர்ந்து அமெரிக்காவை அச்சுறுத்தினால் அல்லது தாக்கினால், அந்த நாடு உலக வரைபடத்தில் இருந்தே முற்றிலும் அழிக்கப்படும். அதன் மின் உற்பத்தி நிலையங்கள், பாலங்கள் உள்ளிட்ட முக்கிய கட்டமைப்புகள் இலக்காகும்” என்று குறிப்பிட்டுள்ளார். மொத்தத்தில், அமெரிக்கா–ஈரான் மோதல் புதிய கட்டத்தை எட்டியுள்ள நிலையில், உலக நாடுகள் அனைத்தும் இந்த நிலைமை எவ்வாறு மாறும் என்பதை கவனமாக கண்காணித்து வருகின்றன. போர் வெடிக்குமா அல்லது இரு தரப்பும் பேச்சுவார்த்தை மூலம் தீர்வை நோக்கி செல்லுமா என்பது தான் தற்போது உலகம் முழுவதும் எழும் மிகப்பெரிய கேள்வியாக உள்ளது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.