ஈரான் மீது அமெரிக்கா- இஸ்ரேல் நடத்தும் கூட்டு தாக்குதல் உலகளாவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. ஈரானும் பதிலுக்கு இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா சார்ந்திருக்கும் நாடுகள் மீது தாக்குதலை நடத்தியது. தற்போது ஈரான் ராணுவம் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில் ஈரானில் இனி நடக்கும் ஒவ்வொரு படுகொலைக்கு பதிலாக ஒரு அமெரிக்க நிறுவனம் அழிக்கப்படும் என மிரட்டல் விடுத்துள்ளது. குறிப்பாக தாக்குதலுக்கு ஆப்பிள் மற்றும் மைக்ரோசாப்ட் உள்ளிட்ட 18 முன்னணி அமெரிக்கத் தொழில்நுட்ப நிறுவனங்களை குறிவைக்க போவதாக ஈரான் புரட்சிகர பாதுகாப்பு படை எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும் ஏப்ரல் 1-ஆம் தேதி இரவு 8 மணி முதல் இந்த நிறுவனங்களின் மீதான தாக்குதல் தொடங்கலாம் என ஈரான் அரசு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
ஈரான் வெளியிட்டுள்ள இந்தப் பட்டியலில் மைக்ரோசாப்ட், கூகுள், ஆப்பிள், இன்டெல், ஐபிஎம், டெஸ்லா மற்றும் போயிங் உள்ளிட்ட 18 நிறுவனங்கள் இடம்பெற்றுள்ளன. இந்த நிறுவனங்கள் ஈரானுக்கு எதிரான உளவுப் பணிகள், படுகொலைத் திட்டங்கள், செயற்கை நுண்ணறிவு சார்ந்த உதவிகள் மற்றும் ராணுவ நடவடிக்கைகளுக்கு அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்கு உதவி செய்வதாக குற்றம் சாட்டியுள்ளது ஈரான். அதைத்தொடர்ந்து ஈரான் புரட்சிகர பாதுகாப்பு படை வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஈரானில் நடத்தப்படும் ஒவ்வொரு பயங்கரவாதச் செயலுக்கு ஈடாக, உதவும் நிறுவனங்கள் தங்களின் கிளைகள் அழிக்கப்படுவதை எதிர்பார்க்கலாம்.
ஏப்ரல் 1-ஆம் தேதி புதன்கிழமை இந்திய நேரப்படி இரவு 10 மணி முதல் இந்தத் தாக்குதல் நடவடிக்கை தொடங்கும் என தெரிகிறது. ஈரான் மீதான தாக்குதலுக்கு இலக்குகளை வடிவமைப்பதிலும், அவற்றைக் கண்காணிப்பதிலும் அமெரிக்கத் தகவல் தொடர்புத் தொழில்நுட்பம் மற்றும் செயற்கை நுண்ணறிவு நிறுவனங்களே முக்கிய அங்கங்களாக விளங்குவதால், இந்த முதன்மையான நிறுவனங்கள் எங்களின் இலக்குகளாக இருக்கும் என குறிப்பிட்டுள்ளது.
எனவே, “இந்த நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்கள் தங்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் பொருட்டு, உடனடியாகத் தங்கள் பணியிடங்களை விட்டு வெளியேறுமாறு எச்சரிக்கப்பட்டுள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க சிறப்புப் படைகள் வெனிசுவேலா தலைநகர் கராகஸில் நடத்திய ராணுவ நடவடிக்கையில் நிக்கோலஸ் மதுரோ மற்றும் அவரது மனைவி சிலியா ஃபுளோரஸ் ஆகியோரை சிறைபிடித்தது. இந்த நடவடிக்கையின் போது, மதுரோவைக் கைப்பற்றுவதற்காக நடத்தப்பட்ட தாக்குதலில் பலர் உயிரிழந்ததாகவும், இது அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் வழிகாட்டுதலின் கீழ் நடந்ததாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன. அதையடுத்து அதிபர் நிக்கோலஸ் மதுரோவைக் கைது செய்ய அமெரிக்கா மேற்கொண்ட நடவடிக்கையில் இத்தகைய தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்பட்டதை ஈரான் குறிப்பிட்டுள்ளது. இன்று முதல் இந்தத் தாக்குதல்கள் தொடங்கலாம் என்பதால், வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க நிறுவனங்களின் பாதுகாப்பு மிகவும் பலப்படுத்தப்பட்டுள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.