உலகம்

ஈரான் கொடுத்த நெருக்கடி! 2 வாரம் கழித்து இந்தியா வரும் எல்பிஜி (LPG) கப்பல் - நிம்மதி பெருமூச்சு விடுமா அரசு?

ஈரான் பரிந்துரைத்த பாதுகாப்பான கடல் பாதையைப் பயன்படுத்தி, லாரக் தீவு வழியாக இந்தக் கப்பல் வெளியே வந்துள்ளது...

மாலை முரசு செய்தி குழு

மத்திய கிழக்கு நாடுகளில் நடக்கும் போர் பதற்றத்தால், கடந்த இரண்டு வாரங்களாக முடங்கிக் கிடந்த எரிபொருள் வரத்து மீண்டும் மெல்லத் தொடங்கியுள்ளது. இந்தியாவுக்குத் தேவையான எல்பிஜி (LPG) சமையல் எரிவாயுவை ஏற்றிக்கொண்டு 'சர்வ சக்தி' (Sarv Shakti) என்ற பிரம்மாண்ட கப்பல், சனிக்கிழமை அன்று உலகின் மிக முக்கியமான கடல் பாதையான ஹார்முஸ் ஜலசந்தியை (Strait of Hormuz) வெற்றிகரமாகக் கடந்து வந்துள்ளது. கடந்த இரண்டு வாரங்களாக எந்தவொரு பெரிய எரிபொருள் கப்பலும் இந்தப் பாதையைக் கடக்காத நிலையில், இந்தக் கப்பலின் வருகை இந்தியாவிற்கு ஒரு பெரிய நம்பிக்கையைத் தந்துள்ளது.

இதற்கு முன்னதாக ஏப்ரல் 18 அன்று 'தேஷ் கரிமா' என்ற கச்சா எண்ணெய் கப்பல் இந்தப் பாதையைக் கடந்தது. அப்போது ஈரான் கடல் பாதையைத் திறந்து விடுவதாகச் சொல்லிவிட்டு, உடனே மீண்டும் மூடியது. அன்று இரண்டு இந்தியக் கப்பல்கள் மீது ஈரான் தாக்குதல் நடத்தியதால், இந்தியா வர வேண்டிய மற்ற கப்பல்கள் மீண்டும் பாரசீக வளைகுடாவுக்கே திரும்பிச் சென்றன. தற்போது சுமார் 45,000 டன் எல்பிஜி கேஸ் ஏற்றி வரும் 'சர்வ சக்தி' கப்பல், சனிக்கிழமை மாலை ஓமன் வளைகுடாவை அடைந்தது. இடையில் சில மணிநேரம் இந்தக் கப்பல் தனது இருப்பிடத்தை யாருக்கும் தெரியாமல் மறைத்து (Going Dark) பயணம் செய்தது. கடத்தல்காரர்கள் அல்லது எதிரி நாடுகளின் தாக்குதலிலிருந்து தப்பிக்கவே இப்படிச் செய்ததாகக் கூறப்படுகிறது.

இந்த ஒரு கப்பலில் இருக்கும் கேஸ் என்பது இந்தியாவின் ஒரு நாள் நுகர்வில் பாதியைக் கூட ஈடுகட்டாது என்றாலும், முடங்கிக் கிடக்கும் மற்ற கப்பல்களும் இனி வரத் தொடங்கும் என்ற நம்பிக்கையை இது விதைத்துள்ளது. தற்போது சுமார் 14 இந்தியக் கப்பல்களும், பல வெளிநாட்டுக் கப்பல்களும் அந்தப் பகுதியில் இன்னும் சிக்கித்தவிக்கின்றன. ஈரான் பரிந்துரைத்த பாதுகாப்பான கடல் பாதையைப் பயன்படுத்தி, லாரக் தீவு வழியாக இந்தக் கப்பல் வெளியே வந்துள்ளது. இந்தக் கப்பலில் இந்திய மாலுமிகள் இருப்பதையும், இது இந்தியாவுக்குத்தான் செல்கிறது என்பதையும் அடையாளப்படுத்திய பிறகே ஈரான் இதைக் கடக்க அனுமதித்துள்ளது.

இந்தியா தனது எரிபொருள் தேவைக்கு மத்திய கிழக்கு நாடுகளைத்தான் பெரிதும் நம்பியுள்ளது. குறிப்பாக நம் நாட்டுக்குத் தேவையான கச்சா எண்ணெயில் 40%, எல்என்ஜி (LNG) கேஸில் 50% மற்றும் மிக முக்கியமாக எல்பிஜி (LPG) கேஸில் 90% இந்தப் பாதை வழியாகத்தான் வருகிறது. இந்தப் பாதையில் ஏற்பட்டுள்ள தடையால், இந்தியாவின் தினசரி கேஸ் பயன்பாடு 90,000 டன்னிலிருந்து 80,000 டன்னாகக் குறைந்துள்ளது. அதாவது கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்படாமல் இருக்க அரசு மிகவும் போராடி வருகிறது.

கேஸ் தட்டுப்பாட்டைச் சமாளிக்க இந்திய அரசு ஒரு அதிரடி முடிவை எடுத்துள்ளது. வீடுகளில் சமையலுக்குப் பயன்படுத்தும் கேஸ் சிலிண்டர் விநியோகம் பாதிக்கப்படக் கூடாது என்பதற்காக, தொழிற்சாலைகளுக்குக் கொடுக்கப்படும் கேஸ் விநியோகத்தை அரசு குறைத்துள்ளது. மேலும், உள்நாட்டிலேயே கேஸ் உற்பத்தியை 40% வரை அதிகரிக்க எண்ணெய் நிறுவனங்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இதன் மூலம் முன்பு 40% ஆக இருந்த இந்தியாவின் சொந்த உற்பத்தி, இப்போது 55% ஆக உயர்ந்துள்ளது. இது போன்ற நடவடிக்கைகளால் தற்காலிகமாகத் தட்டுப்பாடு தவிர்க்கப்பட்டாலும், ஹார்முஸ் ஜலசந்தி முழுமையாகத் திறக்கப்பட்டால் மட்டுமே நிலைமை சீராகும்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்