உலகம்

திண்டாடும் இலங்கை…உதவிக்கு வந்த சர்வதேச அமைப்பு!

Malaimurasu Seithigal TV

விரிவான கடன் வசதியை இலங்கைக்கு வழங்குவதற்காக சர்வதேச நாணய நிதியம்  உடன்பாட்டை ஏற்படுத்திக்கொண்டுள்ளது.

நாணய நிதியம் வருகை

இது தொடர்பில்  அதிகாரப்பூர்வமாக விளக்கமளிப்பதற்காக சர்வதேச நாணய  நிதியத்தின் அதிகாரிகள்  கொழும்பில் நேற்று ஊடகவியலாளர் சந்திப்பை ஏற்பாடு செய்திருந்தனர். 

பொருளாதார சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்துவதற்கு, உரிய மக்கள் ஆதரவுடைய  அரசாங்கம் தேவை என சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் குழுவின் தலைவர்  பீட்டர் பிரீயூர் கூறினார். பீட்டர் பிரீயூர் மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கைக்கான தூதுக்குழு தலைவர்  மசகிரோ நொவாசகி ஆகியோர்   கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டிருந்தனர். 

தவணை முறையில் வழங்க முடிவு

சர்வதேச நாணய  நிதியத்தின் பிரதிநிதிகள் கடந்த  ஆகஸ்ட் 24 ஆம் தேதி இலங்கைக்கு வருகை தந்திருந்த அவர்களின் பயணம் இன்றுடன் நிறைவிற்கு வந்தது. இலங்கைக்கான தூதுக்குழுவின் தலைவர் மசகிரோ நொவாசகி, முழுமையான கடன் தொகை நான்கு வருடங்களில் தவணை முறையில் வழங்கி முடிக்கப்படும் என குறிப்பிட்டார். 

சர்வதேச நாணய  நிதியத்தின் நிறைவேற்றுக் குழுவின் அனுமதியைப் பெற்று  முதலாவது  தவணை  நிதி வழங்கப்படும். ஒவ்வொரு  தவணையின் பின்னரும் அடுத்த தவணைக்கு முன்னதாக நிறைவேற்றுக் குழுன் மீளாய்வுக்கு பின்னரே நிதி விடுவிக்கப்படும் என அவர் சுட்டிக்காட்டினார். 

இலங்கையின் நிலை பாதிப்புக்குள்ளாகும்

இவ்வாறு கடன் வழங்கி உதவி செய்யாவிடின், இலங்கையின் நிலை மோசமடையும் என சர்வதேச நாணய நிதியத்தின் சிறப்பு தூதுக்குழு தலைவர் பீட்டர் பிரீயூர் குறிப்பிட்டார். இலங்கை பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள்வதற்கு அனைத்து கடன்  வழங்குநர்களும் ஒன்றிணைந்து ஆதரவு வழங்க வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார். 

இதேவேளை, சர்வதேச நாணய நிதியம் 2.9 பில்லியன் அமெரிக்க டாலர் விரிவான கடன் வசதியை வழங்குவதற்காக எதிர்ப்பார்க்கும் 7 முக்கிய நோக்கங்களும் அறிவிக்கப்பட்டுள்ளன.

குறைந்த வருமானத்தை பெறும் நாடு    

உலகில் குறைந்த வருமானத்தைப் பெற்றுக்கொள்ளும் நாடுகளில் ஒன்றாக மாற்றம் பெற்றுள்ள இலங்கையின் நிதி வருவாயை அதிகரிப்பது பிரதான இலக்காகும். அதன்கீழ் முதன்மை  வரி சீர்திருத்தங்களை மேற்கொள்ளுதல்,  தனியார் வருமான வரியை முன்னோக்கிச் செல்லுவதாக மாற்றுதல், நிறுவன வருமான வரி மற்றும்  மதிப்பு கூட்டும் வரி தளத்தை விரிவுபடுத்தவும் ஆலோசிக்கப்படுகிறது. வரும் 2024 ஆம் ஆண்டின் போது,  சராசரி தேசிய உற்பத்தியில் 2.3 சதவீத கையிருப்பை எட்டும் என எதிர்பார்க்கப்படுகின்றது. 

தொழில்நுட்ப ஆதரவு

சர்வதேச நாணய நிதியத்தின் தொழில்நுட்ப ஆதரவை பெற்று, இலஞ்ச ஊழலுக்கு எதிரான கட்டமைப்பை உருவாக்கி, அதனூடாக நிதி வௌிப்படைத்தன்மை மற்றும் நிதி முகாமைத்துவத்தை மேம்படுத்தி,  ஊழலை  குறைப்பது சர்வதேச நாணய நிதியத்தின் மற்றுமொரு  இலக்காகும்.